செம்பரம்பாக்கம் ஏரி இன்று மதியம் 12 மணியளவில் திறக்கப்பட உள்ளதாக பொதுப்பணித்துறை அறிவித்துள்ளது. விநாடிக்கு 1,000 கன அடி நீர் வெளியேற்றப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக ஏரியை சுற்றியுள்ள குன்றத்தூர், சிறுகளத்தூர், திருமுடிவாக்கம், திருநீர்மலை ஆகிய கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அடையாறு ஆற்றின் இருபுறமும் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் கவனமுடன் இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

24 அடி கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 22 அடியை நெருங்குவதால் பொதுப்பணித்துறை இந்நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

தொடர்மழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு விநாடிக்கு 4,027 கன அடி தண்ணீர் வருகிறது. 

செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்வரத்துக்கு ஏற்ப படிப்படியாக நீர் வெளியேற்றம் உயர்த்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செம்பரம்பாக்கம் ஏரி நீர் திறப்பு குறித்து உதவி பொறியாளரும் வெள்ள கட்டுப்பாட்டு அலுவலருமான பாபு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே