எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளி..; மாநிலங்களவை ஒத்திவைப்பு..!!

வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் குறித்து விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் நடத்திய அமளி காரணமாக மாநிலங்களவை 11.30 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த வாரம் தொடங்கி நடைபெற்று வருகிறது. பொது பட்ஜெட் நேற்று தாக்கல் செய்யப்பட்டநிலையில் மாநிலங்களவை இன்று காலை கூடியதும், மத்திய அரசு நிறைவேற்றிய வேளாண் சட்டங்களை எதிர்த்து போராடி வரும் விவசாயிகள் குறித்து விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சியைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இது குறித்து மாநிலங்களவையில் நாளை விவாதிக்கப்படும் என்று வெங்கைய நாயுடு அறிவித்தார். 

ஆனால் அதனை ஏற்றுக் கொள்ளாத எதிர்க்கட்சியைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர்கள், அவையிலிருந்து வெளிநடப்பு செய்த நிலையில், மீண்டும் அவைக்குள் வந்து முழக்கமிட்டதால் அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன.

இதனால், மாநிலங்களவையை இன்று காலை 10.30 மணி வரை ஒத்திவைப்பதாக வெங்கைய நாயுடு அறிவித்தார்.

பிறகு மீண்டும் 10.30 மணிக்கு அவை தொடங்கியதும், எதிர்க்கட்சியினர் மீண்டும் அமளியில் ஈடுபட்டனர்.

இதனால் மீண்டும் அவை 11.30 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே