முதல்வர் நாராயணசாமி பெருபான்மையை நிரூபிக்க எதிர்க்கட்சியினர் கடிதம்..!!

புதுச்சேரி சட்டப்பேரவையில் ஆளும் காங்கிரஸ் கட்சி மற்றும் எதிர்க்கட்சிக்கு 14 உறுப்பினர்கள் சம பலத்துடன் இருப்பதால் பெரும்பான்மையை நிரூபிக்க எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் துணைநிலை ஆளுநர் அலுவலகத்தில் கடிதம் அளித்தனர்.

புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் கூட்டணி அரசில் இருந்து காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர்கள் தொடர்ந்து தங்கள் பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து சட்டப்பேரவையில் காங்கிரஸ் கூட்டணியின் பலம் தற்போது 14 ஆக உள்ளது.

இதேபோல், எதிர்க்கட்சி வரிசையில் என்.ஆர்.காங்கிரஸ், அதிமுக மற்றும் பாஜக ஆகிய கட்சிகளைச் சேர்ந்த 14 பேர் உள்ளனர்.

இதனையடுத்து, ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சியின் சட்டப்பேரவை பலம் சமமாக இருப்பதால் பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் வலியுறுத்தி இருந்தனர்.

இந்நிலையில், சட்டப்பேரவையில் தங்களுக்குப் பெரும்பான்மை இருக்கிறது என முதல்வர் நாராயணசாமி தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இன்று (பிப்.17) காலை என்.ஆர்.காங்கிரஸ் கட்சித் தலைவரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான ரங்கசாமி தலைமையில் என்.ஆர்.காங்கிரஸ், அதிமுக, பாஜக ஆகிய கட்சிகளின் 14 சட்டப்பேரவை உறுப்பினர்கள் துணைநிலை ஆளுநர் மாளிகைக்குச் சென்று தாங்கள் கையெழுத்திட்ட கடிதத்தை துணைநிலை ஆளுநர் அலுவலகத்தில் கொடுத்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் ரங்கசாமி, சட்டப்பேரவையில் ஆளும் கூட்டணி பலம் 14 உறுப்பினர்களைக் கொண்டுள்ளதாலும், எதிர்க்கட்சி வரிசையில் 14 பேர் உள்ளதாலும் சட்டப்பேரவையில் ஆளும் கூட்டணி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் எனக் கடிதம் கொடுத்துள்ளதாகத் தெரிவித்தார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே