இன்னும் 72 ரன்கள்தான்; புதிய சாதனையை நோக்கி கோலி: ரோஹித் சர்மா படைக்கும் மைல்கல்

அகமதாபாத்தில் நாளை தொடங்கும் இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டி20 தொடரில், கேப்டன் விராட் கோலி புதிய சாதனையை படைப்பார் என எதிர்பார்க்கலாம்.

இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 3-1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது. இதைத் தொடர்ந்து 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நாளை தொடங்குகிறது. இந்தப் போட்டிகள் அனைத்தும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தால் நடக்கின்றன.

இந்த ஆண்டு இறுதியில் நடக்கும் டி20 உலகக்கோப்பைப் போட்டிக்கு இரு அணிகளும் தங்களை தயார்படுத்திக்கொள்ள இந்த தொடர் பெரிய வாய்ப்பாக இருக்கும். இந்திய அணியில் பல புதிய வீரர்கள் வாய்ப்புப் பெற்றுள்ளனர் அவர்களின் திறமையை பரிசோதித்து பார்க்கவும், எந்த இடத்தில் எந்த வீரர் சரியாக களமிறங்குவார் என்பதைபரிசோதித்து பார்க்கவும் இந்தத் தொடர் பயன்படும்.

நாளை தொடங்கும் டி20 தொடர் குறித்த சில சுவாரஸ்ய புள்ளிவிவரங்களைக் காணலாம்

இதுவரை இங்கிலாந்து, இந்திய அணிகள் 14 டி20 போட்டிகளி்ல் மோதியுள்ளன. இதில் இந்திய அணி 7 போட்டிகளிலும், இங்கிலாந்து அணி 7 போட்டிகளிலும் வென்றுள்ளன. இந்திய மண்ணில் விளையாடிய 6 போட்டிகளிலும் இரு அணிகளும் தலா 3 போட்டிகளில் வென்றுள்ளன.

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி இதுவரை 85 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடி 2,928 ரன்கள் சேர்த்துள்ளார். 3 ஆயிரம் ரன்களை எட்டுவதற்கு இன்னும் 72 ரன்கள் மட்டும்தான் கோலிக்கு தேவை. 3 ஆயிரம் ரன்களை கோலி எட்டிவிட்டால், டி20 தொடரில் 3 ஆயிரம் ரன்களை எட்டிய முதல் வீரர் எனும் சாதனையை படைப்பார். டி20, ஒருநாள், டெஸ்ட் ஆகிய 3 பிரிவுகளிலும் 3 ஆயிரம் ரன்களை எட்டிய முதல் வீரர் எனும் பெருமையும் கோலியைச் சேரும்.

விராட் கோலி கேப்டனாக பொறுப்பேற்று இதுவரை 11 ஆயிரத்து 983 ரன்கள் சேர்த்துள்ளார். 12 ஆயிரம் ரன்களை எட்டுவதற்கு இன்னும் 17 ரன்கள்தான் தேவை. நாளைய டி20 போட்டியில் கோலி 17 ரன்களை எடுத்தால், உலகளவில் கேப்டனாக பொறுப்பேற்று 12 ஆயிரம் ரன்களை எட்டிய 3-வது கேப்டன் எனும் சிறப்பை கோலி பெறுவார். இதற்கு முன ஆஸி. முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங்(15,440), தென் ஆப்பிரி்க்க முன்னாள் கேப்டன் 14,878 ரன்கள் சேர்த்துள்ளனர்.

டி20 தொடரில் ரோஹித் சர்மா புதிய மைல்கல்லை எட்ட வாய்ப்புக் கிடைத்துள்ளது. இதுவரை ரோஹித் சர்மா டி20 போட்டிகளில் 127 சிக்ஸர்களை விளாசியுள்ளார். நியூஸிலாந்து வீரர் மார்டின் கப்தில் 139 சி்க்ஸர்களை அடித்து முதலிடத்தில் இருக்கிறார், அவரின் சாதனையை முறியடிக்க ரோஹித் சர்மாவுக்கு இன்னும் 13 சிக்ஸர்கள் மட்டுமே தேவை. இந்த டி20 தொடரில் அதை கடப்பார் என நம்பலாம்.

ரோஹித் சர்மா 100 டி20 இன்னிங்ஸ்களில் விளையாடி இதுவரை 2,773 ரன்கள் சேர்த்துள்ளார். மார்டின் கப்திலின் ரன்களை முறியடிக்க இன்னும் 63 ரன்கள்தான் தேவை. இதை அடைந்தால், டி20 போட்டிகளில் அதிகமான ரன்கள் சேர்த்ததில் 2-வது வீரராக ரோஹித் சர்மா இருப்பார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே