வெங்காய பதுக்கல்..; பாதுகாப்புத்துறை அலுவலர் புதிய தகவல்..!!

பெரம்பலூர் அருகே உள்ள இரூர் பகுதியில் இருக்கும் கோழிப்பண்ணையில் வெங்காயம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக தோட்டக்கலைத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

அந்த தகவலின் பேரில், அதிரடி சோதனையில் ஈடுபட்ட அதிகாரிகள் இரூர் உள்ளிட்ட 4 இடங்களில் 2000 கிலோ வெங்காயம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதை கண்டுபிடித்தனர்.

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியருக்கு தகவல் கொடுக்கப்பட்டதன் பேரில், அந்த வெங்காயங்கள் அனைத்தையும் பறிமுதல் செய்ய உத்தரவிடப்பட்டது.

மேலும் 2000 கிலோ வெங்காயத்தை பதுக்கிய முத்துச்செல்வன், ரவிச்சந்திரன், அழகேசன், நடராசன் ஆகிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

தொடர்ந்து பதுக்கல் வெங்காயத்தை கூட்டுறவுத்துறை மூலம் மக்களுக்கு விநியோகம் செய்யலாமா என உணவுபாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். 

அதன்படி உணவுபாதுகாப்பு துறை அலுவலர் சீனிவாசன் தலைமையில் பல மணிநேரமாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆய்வின் முடிவில் வெங்காயம் அழுகிப்போய் தரம் இல்லாமல் இருப்பது கண்டறியப்பட்டது.

மேலும் இதனை பொதுமக்கள் பயன்படுத்த முடியாது என்றும் பதுக்கல் வெங்காயம் அனைத்தையும் குழிதோண்டி புதைத்து அழிக்கத்தான் வேண்டும் என்றும் சீனிவாசன் தெரிவித்தார்.

இந்த பதுக்கல் வெங்காயம் அனைத்தும் மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே