தமிழகத்தில் இ-பாஸ் பெறுவதற்கு புதிய நடைமுறைகள் அறிவிப்பு: யார் யார் பெற முடியும்?

தமிழகத்தில் கரோனா ஊரடங்கு சமயத்தில் இ-பாஸ் பெறுவதற்கான புதிய நடைமுறைகளை தமிழக அரசு இன்று அறிவித்துள்ளது.

கரோனா பரவலை தடுக்க ஊடரங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், பலர் தங்களின் தேவைகளுக்காக வெளியே செல்ல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மிக அவசரமாக வெளியே செல்லும் தேவை இருப்பவர்களுக்கு இ-பாஸ் வழங்கப்படுகிறது. இதற்காக இணையதளம் மூலம் விண்ணப்பித்து அனுமதி பெற முடியும்.

இந்தநிலையில் இ -பாஸ் பெறுவதற்கான புதிய நடைமுறை குறித்த அறிவிப்பு தொடர்பாக தலைமைச் செயலாளர் சண்முகம், அரசின் பல்வேறு துறை செயலாளர்கள் உள்ளிட்டோருக்கு கடிதம் எழுதியுள்ளார். அவரது அறிவிப்பு:

தமிழகத்தில் இ-பாஸ் பெறுவதற்கான நடைமுறைகள் ஏப்ரல் 15-ம் தேதி அறிவிக்கப்பட்டு மே 3-ம் தேதி வரை அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இ-பாஸ் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது இ-பாஸ் வழங்க புதிய நடைமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
https://tnepass.tnega.org என்ற இணையதளத்தில் மொபைல் போன் மூலம் விண்ணப்பித்து பாஸ் பெறலாம்.

மாவட்டங்களுக்குள் செல்லுவதற்கான பாஸ்: இந்த அனுமதிச் சீட்டு மாவட்ட ஆட்சியர், மாவட்ட தொழில் மையம் அல்லது சென்னை பெருநகர ஆணையர்/ ஜேடி,டிஐசியால் வழங்கப்படும். அருகில் உள்ள மாவட்டங்களை அடையாளப்படுத்தும் வகையில் வேறுபட்ட வண்ணத்தில் இந்த பாஸ் இருக்க வேண்டும்.

மாவட்டங்களை கடந்து செல்லும் பாஸ்: இந்த அனுமதிச் சீட்டு மாநில இ-பாஸ் கட்டுப்பாட்டு அறை மூலம் வழங்கப்படும். அதேசமயம் தொழில் தொடர்பான தேவை என்றால் வழக்கம்போல் காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் சென்னை மாவட்ட ஆட்சியர்கள், சென்னை பெருநகர மாநகராட்சி ஆணையர், சம்பந்த மாவட்ட மாவட்ட தொழில் மையம் அல்லது ஆணையரிடம் இருந்து பெறலாம்

வேறு மாநிலங்களுக்கான பாஸ்: இது முழுமையாக மாநில இ-பாஸ் கட்டுப்பாட்டு அறை மூலம் மட்டுமே வழங்கப்படும். மற்ற இரண்டு வகை பாஸ்களில் இருந்து வேறுபடுத்தி காட்டும் வகையில் தனித்தனி வண்ணங்களில் வழங்கப்படும். வெளி மாநிலங்களில் இருந்து வருபவர்கள் ஆன்லைன் இணையதளத்தில் விண்ணப்பித்து பெறலாம்.

மாவட்ட மற்றும் மாநிலங்களுக்கு இடையிலான பாஸ் தொழில்துறை, எம்எஸ்எம்இ, காவல்துறை, வருவாய்துறை அதிகாரிகளால் ஆய்வு செய்யப்பட்டு வழங்கப்படும். அந்த அனுமதிச் சீட்டின் பிரதி சம்பந்தப்பட்ட மாவட்டங்கள், மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். வெளி மாநிலங்களில் இருந்து வருபவர்கள் 14 நாட்கள் தனித்து வைக்கப்படுவர்.

1) தனிநபர் பாஸ்:

திருமணம், மரணம், மருத்துவ தேவைக்கு மட்டுமே வழங்கப்படும்

அ) திருமணம்: நெருங்கிய உறவினரின் திருமணத்துக்கு மட்டும் அனுமதி வழங்கப்படும். திருமண அழைப்பிதல் இணைக்கப்பட வேண்டும்,

ஆ) மரணம்: மரணம் குறித்து மருத்துவர் அல்லது கிராம நிர்வாக அதிகாரியின் சான்று இணைக்கப்பட வேண்டும்.

இ) மருத்துவ காரணங்களுக்கு என்றால் நோயாளியுடன் ஒருவருக்கு மட்டும் வழங்கப்படும். அதற்கு மருத்துவரின் சான்றிதழ் இணைக்கப்பட வேண்டும்.

விதிமுறைகள்

வெளி மாநிலங்களில் இருந்து வருபவர்கள் 1070 எண்ணை தொடர்பு கொண்டு சம்பந்தப்பட்ட மாவட்டங்களுக்கு தெரிவிக்க வேண்டும். கட்டாயம் 14 நாட்கள் தனிமைப்படுத்தபடுவார்கள்.

ஒரு மாவட்டத்தில் இருந்து மற்றொரு மாவட்டத்துக்கு செல்பவர்களும் அறிகுறி தென்பட்டால் தனிமைப்படுத்தப்படுவர். அவர்கள் இதுபற்றி உடனடியாக சுகாதாரததுறை அதிகாரிக்கு தகவல் அளிக்க வேண்டும்.

கரோனோ பாதிக்கப்பட்டவர்களுடன் கடந்த 15 நாட்களில் தொடர்பில் இல்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.

இ-பாஸ் மாற்றத்தக்கதல்ல, தவறாக பயன்படுத்தினால் தண்டனைக்குரிய குற்றமாகும்.

வழங்கப்பட்ட பாஸ் பிரதியை பயணத்தின்போது வாகனத்தில் ஒட்டியிருக்க வேண்டும். பயணத்தின்போது அறிவிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை கடைபிடிக்க வேண்டும்.

முககவசம், கிருமிநாசினி போன்ற ஏற்பாடுகள் இருப்துடன் சமூகவிலக்கலையும் கடைபிடிக்க வேண்டும்.

2) தொழில்நுட்ப சேவை வழங்குபவர்:

தச்சர், பிளம்பர், எலெட்ரிஷியன் போன்ற தனிநபர்கள் தனிப்பட்டமுறையில் சேவை வழங்குபவர்கள் அரசு உத்தரவு வந்த பிறகு பணிகளுக்கு செல்ல பாஸ் வழங்கப்படும்

3) தொழிற்சாலை/ நிறுவனங்களுக்கான பாஸ்:

கடைகள், நிறுவனங்கள், தகவல் தொழிலநுட்பம், தொழிற்சாலைகள் தங்கள் ஊழியர்கள் பயணம் செய்ய இதன் கீழ் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனங்கள் ஜிஎஸ்டி,பதிவு சான்றிதழ், உத்யோக் ஆதார் போன்றவற்றின் சான்றிழை இணைக்க வேண்டும்.நிறுவனங்கள் தங்கள் செயல்பாடு குறித்த நிரந்த குறிப்பையும் இணைக்க வேண்டும்.

அவ்வப்போது அரசு அறிவிப்பு வரும்போது நிறுவனங்கள் ஊழியர்கள் பயணம் செய்யும் வாகனங்கள் குறித்த விவரங்களை அளிக்கவேண்டும்.
மாவட்ட தொழில்துறை பொது மேலாளர், தொழில் மற்றும் வர்த்தகத்துறை சென்னை இணை இயக்குநர் இதற்கான பாஸ் வழங்குவர்.

பாஸ் குறித்த விவரங்களை மாவட்ட ஆட்சியர், சென்னை பெருநகர மாநகராட்சி ஆணையர் போன்றவர்களின் உதவியாளர் அல்லது அவர்கள் நியமிக்கும் அதிகாரி வழங்குவா்.

எஸ்எம்எஸ் அறிவிப்பு: பாஸ் பெறுவதற்கு எஸ்எம்எஸ் சம்பந்தப்பட்டவர்களின் மொபைல் எண்ணுக்கு ஓடிபி வழங்கி உறுதிப்படுத்தப்படும். அதுபோலவே பாஸ் உறுதி செய்யப்பட்ட பிறகு மீண்டும் எஸ்எம்எஸ் அனுப்பப்படும். அதன் மூலம் பாஸை டவுன்லோடு செய்து கொள்ளலாம்.

கியூஆர் கோடு: பாஸ்களில் கியூஆர்கோடு இருக்கும். இதனை பயன்படுத்தியும் டவுன்லோடு செய்து கொள்ள முடியும்.

தொலைபேசி சேவை: மாநில இ-பாஸ் கட்டுப்பாட்டு அறையை 1-800-425-1333 என்ற எண்ணை காலை 8 முதல் இரவு 8 வரை எந்த நாளும் தொடர்பு கொள்ளலாம்.

இலவச சேவை: இண்டர்நெட் சேவை இல்லாதவர்கள் இ-சேவை மையத்திற்கு சென்று இலவசமாக சேவை பெறலாம்.

அதிகாரிகளால் ஏற்கெனவே வழங்கப்பட்ட பாஸ் அதற்குரிய காலம் வரை பயன்பாட்டில் இருக்கும். அதுபற்றி பிறகு அறிவிக்கப்படும். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பாஸ் பெறுவதற்கான புதிய நடைமுறைகளுக்கு மாற வேண்டும். புதிய நடைமுறை தொடங்கும் நேரம் மற்றும் நாள் விரைவில் அறிவிக்கப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Jiiva

தலைமை ஆசிரியர்.

Jiiva has 407 posts and counting. See all posts by Jiiva

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே