புதிய சிக்கல் – சுகாதாரத்துறை செயலர் தகவல்..!!

கொரோனா தொற்றால் கடந்த ஓராண்டு காலமாக வாழ்வாதாரத்தை இழந்து தவித்த நேரத்தில் மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு உலக மக்கள் அனைவரும் திரும்பிக் கொண்டிருக்கின்றனர்.

இந்த நிலையில் ஐரோப்பிய ஒன்றியங்களில் ஒன்றான பிரிட்டனில் மரபணு மாற்றமடைந்த கொரோனா தற்போது அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது.

இந்த உருமாற்றம் பெற்ற கொரோனா 70 சதவிகிதம் வேகமாக பரவி தொற்று பாதிப்பை ஏற்படுத்த வல்லது என ஆராய்ச்சியாளர்கள் கூறியிருக்கிறார்கள்.

அதன்படி, கொரோனாவில் இருந்து மீண்டு கொண்டிருந்த ஜெர்மனி, இத்தாலி, ஸ்பெயின், ஜப்பான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் வீரியமிக்க கொரோனா ஊடுருவியுள்ளது.

அப்படி இருக்கையில், இந்தியாவையும் இந்த உருமாற்றமடைந்த கொரோனா விட்டுவைக்கவில்லை. 

நவம்பர் 25 முதல் டிசம்பர் 23ம் தேதி வரை பிரிட்டனில் இருந்து இந்தியாவுக்கு பல்வேறு வழிகளில் வந்த பல்லாயிரக் கணக்கானோரில் தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் உட்பட இதுவரையில் 25 பேருக்கு உருமாற்றமடைந்த கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

இந்நிலையில், சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், கடந்த நவம்பர் மாதம் 25 ஆம் தேதியில் இருந்து தமிழகத்திற்கு 2,080 பேர் பிரிட்டனில் இருந்து வந்திருக்கிறார்கள்.

இதில் 487 பேரை கண்டறிவதில் சிக்கல் நீடிக்கிறது என்ற அதிர்ச்சி தகவலை கூறியுள்ளார்.

மேலும் இந்த 487 நபர்களுமே சென்னை மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தைச் சார்ந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளது என்றும், அவர்களை கண்டறியும் பணியும் தொடர்ச்சியாக நடைபெற்று வருவதாகத் தெரிவித்தார்.

மேலும் இந்த 487 நபர்களில் 54 நபர்கள் மீண்டும் லண்டன் சென்று விட்டதாக தகவல் கிடைத்து உள்ளதாகவும் கூறினார். இந்த அதிர்ச்சித் தகவல் மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே