பேச்சுவார்த்தை மீண்டும் தோல்வி..; உயிரையும் விடுவோம் என விவசாயிகள் சூளுரை..!!

மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி 44ஆவது நாளாக விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும் லட்சக்கணக்கான விவசாயிகள் டெல்லி எல்லையில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

பஞ்சாப், அரியானா, ராஜஸ்தான் உள்ளிட்ட மாநில விவசாயிகள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

விவசாயிகள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. அந்த வகையில் விவசாய சங்கங்களுடன் மத்திய அரசு இடையே 7 சுற்றுகளாக பேச்சுவார்த்தை முடிந்த நிலையில் அனைத்தும் தோல்வியில் முடிந்தது.

விவசாய சட்டங்களை திரும்பபெற வாய்ப்பே இல்லை என்று மத்திய அரசு தெரிவித்துவிட்டது.

இந்நிலையில், வேளாண் சட்டங்களை திரும்பபெறும் வரை போராட்டம் தொடரும் என்றும்; குடியரசு தினத்தன்று டெல்லி ராஜபாதையில் டிராக்டர் அணிவகுப்பு நடத்துவோம் எனவும் விவசாயிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதற்கிடையில், விவசாய சங்கங்கள் – மத்திய அரசு இடையே 8ஆம் கட்ட பேச்சுவார்த்தை இன்று நடைபெற்றது.

டெல்லி விக்யான் பவன் அரங்கில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் மத்திய அரசு சார்பில் மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திரசிங் தோமர் மற்றும் மத்திய மந்திரி பியூஸ் கோயல் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

விவசாய சங்கங்களின் தலைவர்கள் பேச்சுவார்த்தையில் பங்கேற்றுள்ளனர்.

இந்த பேச்சுவார்த்தையின் போது, ‘உயிரிழப்போம் அல்லது வெற்றிபெறுவோம்’ என்ற பதாகைகளை கையில் ஏந்தியவாறு விவசாய சங்கத்தினர் பங்கேற்றனர்.

இந்நிலையில், 2 மணி நேரம் நீடித்த இன்றைய பேச்சுவார்த்தையும் எந்த வித முடிவுகளும் எட்டப்படாமல் தோல்வியில் முடிந்தது.

வேளாண் சட்டங்களை திரும்பபெற வேண்டும் என்ற நிலைப்பாட்டில் விவசாய சங்கங்களும், சட்டங்களை திரும்பப்பெறப்போவதில்லை என்ற நிலைப்பாட்டில் மத்திய அரசும் உறுதியாக இருந்ததால் 8ஆம் கட்டமாக நடந்த இன்றைய பேச்சுவார்த்தையும் தோல்வியடைந்துள்ளது.

இரு தரப்பும் இடையேயான 9-ம் கட்ட பேச்சுவார்த்தை வரும் 15ஆம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே