சர்வதேச மகளிர் தினத்தையொட்டி பல்வேறு துறைகளில் சாதனை படைத்த பெண்களுக்கு குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் விருதுகள் வழங்கி கவுரவித்தார்.
நம் நாட்டில் பெண்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய விருதான நாரி சக்தி என்ற விருது, பல்வேறு துறைகளில் சாதனைப் படைத்த பெண்களுக்கு மத்திய அரசு சார்பில் ஆண்டுதோறும் சர்வதேச மகளிர் தினத்தன்று வழங்கப்படுவது வழக்கம்.
அதன்படி, இந்தாண்டுக்கான விருதை டெல்லியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பல்வேறு துறைகளில் சாதனை புரிந்த பெண்களுக்கு விருதுகள் வழங்கி கவுரவித்தார்.
மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், ஸ்மிருதி இரானி உள்ளிட்டோர் பங்கேற்ற இந்த நிகழ்ச்சியில், இந்திய விமானப்படையில் போர் விமானிகளாக பொறுப்பேற்ற 3 பேருக்கும் விருதுகளை வழங்கி குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் சிறப்பித்தார்.
நாரி சக்தி புரஸ்கார் எனப்படும் மகளிர் சாதனை விருதைப் பெற உற்சாகத் துள்ளலுடன் வந்த 103 வயது தடகள வீராங்கனை மான் கவுர் பார்வையாளர்களைக் கவர்ந்தார்.
பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த 103 வயது மூதாட்டியான மான்கவுர் 100 வயதுக்கும் மேற்பட்டோருக்கான தடகளப் பிரிவில் பல்வேறு சாதனைகளைப் படைத்தவர்.
பல தங்கப் பதக்கங்களையும் வென்றுள்ளார்.
இந்நிலையில் மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்களின் சாதனைகள் மற்றும் பங்களிப்புகளுக்காக வழங்கப்படும் உயரிய விருதான நாரி சக்தி புரஸ்கார் விருதை மான் கவுருக்கு குடியரசுத் தலைவர் வழங்கினார்.