‘அந்த’ உண்மையை சொன்ன பிறகும் கூட விஜய் சேதுபதியை ஊக்குவித்த முத்தையா முரளிதரன்

முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிப்பது குறித்து விஜய் சேதுபதி சுவாரஸ்யமான தகவலை வெளியிட்டுள்ளார்.
இலங்கையை சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு 800 என்கிற பெயரில் படமாகிறது. அந்த படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி முத்தையா முரளிதரனாக நடிக்கிறார் என்பது அனைவருக்கும் தெரியும். அந்த படத்தில் இருந்து விஜய் சேதுபதி விலகிவிட்டதாக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தகவல் வெளியாகி தீயாக பரவியது.
அந்த தகவல் குறித்து அறிந்த விஜய் சேதுபதியோ, நான் படத்தில் இருந்து விலகவில்லை, முத்தையா முரளிதரனாக நடிப்பது உறுதி என்று விளக்கம் அளித்தார். இந்நிலையில் விஜய் சேதுபதி அண்மையில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் 800 படம் குறித்து கூறியிருப்பதாவது,

நான் கிரிக்கெட் போட்டிகளை பார்ப்பது கூட இல்லை. எனக்கு கிரிக்கெட்டை பார்த்தால் போர் அடிக்கும். அதனால் சிறு வயதில் இருந்தே கிரிக்கெட் போட்டிகளை பார்ப்பது இல்லை. சொல்லப் போனால் இதை தான் முத்தையா முரளிதரனிடம் கூறினேன். அதற்கு அவரோ, என் கதாபாத்திரத்தில் நடிக்க இது தான் சிறந்த தகுதி என்று தெரிவித்தார்.

800 படத்தில் நடிக்க நான் என் உடல் எடையை குறைத்துக் கொண்டிருக்கிறேன். இதற்காக சிறப்பு பயிற்சியாளர் ஒருவரை நியமித்துள்ளேன். ஆனால் தற்போதுள்ள சூழலில் ஏற்படும் மன அழுத்தத்தால் வெயிட்டை குறைக்க முடியுமா என்று தெரியவில்லை. தற்போதைய சூழலில் நான் நிறைய சாப்பிடுகிறேன் என்றார்.

800 படத்தை பிரபல தெலுங்கு நடிகர் ராணா தயாரிக்கிறார். அந்த படத்தை எம்.எஸ். ஸ்ரீபதி இயக்குகிறார். கொரோனா வைரஸ் பிரச்சனையால் வீட்டில் முடங்கியிருக்கும் விஜய் சேதுபதி தொடர்ந்து பேட்டிகள் கொடுத்து வருகிறார். அந்த பேட்டிகளில் தன் படங்கள், கதாபாத்திரங்கள், கெரியர் குறித்து பல சுவாரஸ்யமான தகவல்களை கூறுகிறார்.
விஜய் சேதுபதி சிறு, சிறு கதாபாத்திரங்களில் நடித்து தான் ஹீரோவாக ஆனார். அவரை போன்று கஷ்டப்பட்டு ஹீரோவானவர்கள் அந்த இமேஜை தக்கவைத்துக் கொள்ளத் தான் நினைக்கிறார்கள். ஆனால் விஜய் சேதுபதியோ முன்னணி ஹீரோவாக இருக்கும் இந்த நேரத்தில் வில்லன், ஹீரோயினுக்கு அப்பா, குணச்சித்திர கதாபாத்திரங்களில் எல்லாம் நடிக்கிறார்.
அதிலும் குறிப்பாக முன்னணி ஹீரோக்களுக்கு விரும்பி வில்லனாக நடிக்கிறார். ஹீரோ என்கிற ஒரு வட்டத்தில் அடங்கிவிடக் கூடாது என்பதால் தான் இப்படி வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிக்க ஒப்புக் கொள்வதாக விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.

மாஸ்டர் படத்தில் விஜய்க்கு வில்லனாக நடித்திருக்கிறார் விஜய் சேதுபதி. கொரோனா வைரஸ் பிரச்சனையால் மாஸ்டர் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப் போயுள்ளது. அந்த படத்தில் தான் கொடூரமானவாக, துளி கூட நல்லவன் இல்லாத கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக விஜய் சேதுபதி அண்மையில் தெரிவித்தார். மாஸ்டர் பற்றி ஏதாவது அப்டேட் கிடைக்காதா என்று ஏங்கிய ரசிகர்களுக்கு விஜய் சேதுபதி அளித்த தகவல் சந்தோஷத்தை அளித்தது.
லாக்டவுன் முடிந்த பிறகு விஜய் சேதுபதி ஆமீர் கானின் லால் சிங் சட்டா இந்தி படத்தில் நடிக்கவிருக்கிறார். அந்த படத்தில் விஜய் சேதுபதி ஆமீர் கானின் நண்பராக, ராணுவ வீரராக நடிக்கிறாராம். லால் சிங் சட்டா மூலம் விஜய் சேதுபதி பாலிவுட்டில் அறிமுகம் ஆகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழிலேயே நடிக்க நேரத்தை காணோம். இதில் தெலுங்கு, மலையாளம், இந்தி என்று பிற மொழி படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார் விஜய் சேதுபதி.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே