திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூலை 18) காலையில், சென்னை துறைமுகம் மற்றும் கொளத்தூர் தொகுதிகளின் பல்வேறு இடங்களில் கரோனா நிவாரண உதவிகளை வழங்கினார்.
இது தொடர்பாக, திமுக தலைமைக் கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
“திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் துறைமுகம் தொகுதியில் ‘டேலி’ (TALLY) பயிற்சி முடித்த 101 மாணவிகளுக்குச் சான்றிதழ், மடிக்கணினி மற்றும் நிவாரணப் பொருட்களை வழங்கினார்.
பின்னர், தன்னுடைய கொளத்தூர் தொகுதிக்குச் சென்ற அவர், வார்டு 69- திக்காகுளம் பகுதியில் உள்ள பொதுமக்களுக்குக் காலை உணவு வழங்கினார்.
வார்டு 69-ல் பல்லவன் சாலையில் உள்ள டான் போஸ்கோ பள்ளியில் கொளத்தூர் தொகுதியில் உள்ள 30 மகளிர் சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த 300 மகளிருக்கும், அப்பள்ளியில் பணிபுரியும் 19 தூய்மைப் பணியாளர்களுக்கும் நிதி உதவி மற்றும் நிவாரணப் பொருட்களை வழங்கினார்.
அதன்பிறகு, வார்டு 66 – பெரவள்ளூர் சந்திப்பு, ஜெயின் பள்ளியில் கொளத்தூர் கிழக்குப் பகுதியில் உள்ள பொதுமக்கள் 5,000 பேருக்கு நிவாரணப் பொருட்களை வழங்கினார்.
வார்டு 65 – வி.வி. நகர், குருகுலம் பள்ளியில் கொளத்தூர் மேற்குப் பகுதியில் உள்ள 5,000 பொதுமக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கினார்.
வார்டு 65 – சீனிவாசா நகர் பள்ளியில் ‘அனிதா அச்சீவர்ஸ் அகாடமி’யில் பயிலும் 220 மாணவிகளுக்கு நிதியுதவியும் நிவாரணப் பொருட்களும் வழங்கினார்”.
இவ்வாறு திமுக தலைமைக் கழகம் தெரிவித்துள்ளது.