தமிழகத்தில் ஆளுமையான தலைமைக்கு வெற்றிடம் இல்லை என்றும், அதனை திமுக தலைவர் ஸ்டாலின் எப்போதோ நிரப்பி விட்டார் என்றும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த வைகோ, தென்பெண்ணையாற்றின் குறுக்கே 70 சதவீத அணை கட்டும் பணிகளை கர்நாடகம் முடித்துவிட்டது.
ஆனால் இவ்விவகாரத்தில் முன்கூட்டியே தமிழக அரசு தேசிய பசுமை தீர்பாயத்தை அணுகாதது ஏன் என உச்சநீதிமன்றமே கேள்வி எழுப்பியுள்ளது.
எனவே நீர் மேலாண்மை விவகாரத்தில் தமிழக அரசு குற்றவாளிக் கூண்டில் நிற்பதாக விமர்சித்தார்.
மேலும் பேசிய வைகோ மேகதாது, ஹைட்ரோகார்பன் என அடுத்தடுத்து தமிழகத்தை பாதிக்கும் விவகாரங்களில் உரிய நடவடிக்கையை தமிழக அரசு எடுக்காமல் உள்ளது என கூறினார்.
உள்ளாட்சி தேர்தலை நிறுத்தும் முயற்சியில் திமுக ஈடுபடவில்லை என்று குறிப்பிட்ட வைகோ, அதிமுக தான் அதனை செய்து வருவதாக சாடினார்.
வரும் உள்ளாட்சி தேர்தலிலும் திமுகவுடனான கூட்டணி தொடரும் என்று வைகோ கூறியுள்ளார்