தியானமே சிறந்த பரிசு – ரசிகர்களுக்கு சமந்தாவின் சிபாரிசு

தியானம் தான் உங்களுக்கு நீங்களே அளித்துக்கொள்ளும் சிறந்த பரிசாக இருக்க முடியும் என்று நடிகை சமந்தா பதிவிட்டுள்ளார்.

சமந்தாவின் பிஃட்னஸிற்கு கடுமையான உடற்பயிற்சிகள் மட்டுமல்ல, அவரின் யோகா மற்றும் தியான பயிற்சிகளும் காரணமாக இருக்கின்றன.

சமந்தா இவ்வருடம் ஈஷா யோகா மையத்தில் நடைபெற்ற மஹாசிவராத்திரி விழாவில் கலந்து கொண்டார். அவ்விழாவில் அவருடன் நடிகைகள் ரகுல் ப்ரீத் சிங் மற்றும் மஞ்சு லட்சுமி ஆகிய மூவரும் தியானம் செய்யும் போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றை அவரின் சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்துள்ளார். மேலும் அதனுடன் ஒரு பதிவையும் பதிந்துள்ளார்.

அதில் அவர் கூறியுள்ளதாவது:

ஒவ்வொரு முறையும் நான் தியானத்தில் அமரும் போது, ஒரு விவரிக்க முடியாத உணர்வு என்னுள் கடந்து செல்கிறது. அது நான் பார்க்கும் விதத்தையே மாற்றுகிறது, என்னை சிறைப்படுத்தும் உள் எண்ணங்களில் இருந்து விடுவிக்கிறது. தியானம் ஒருவித அமைதியையும், நேர்மறையான விஷயங்களையும் என் வாழ்க்கையில் கொண்டுவந்துள்ளது.

இப்போதே உங்களின் தியான பயணத்தை தொடங்குங்கள், நீங்கள் பின்பற்றுவது எந்த முறையானாலும் அல்லது எந்த யோகா பள்ளியை சார்ந்ததாக இருந்தாலும் சரி. அது தான் உங்களுக்கு நீங்களே அளித்துக் கொள்ளும் சிறந்த பரிசாக இருக்க முடியும்.

மேலும் அதனுடன் சத்குருவின் தியானம் குறித்த மேற்கோள் ஒன்றையும் குறிப்பிட்டுள்ளார்.

தியானம் மனம் கடந்த பரிணாமமாக இருப்பதால், அது ஒன்றே அழுத்தங்களில் இருந்து நம்மை விடுவிக்கும் வழி. எல்லா அழுத்தங்களும், போராட்டங்களும் மனம் சார்ந்தவையே. – சத்குரு.

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்வதில் மிகுந்த அக்கறை காட்டும் நபராகவே சமந்தா அறியப்படுகிறார். உடற்பயிற்சி கூடங்களில் பளு தூக்குதல் முதல் ஆரோகியத்திற்காக தாவரம் சார்ந்த உணவு முறைகளை மேற்கொள்வது வரை பல்வேறு செயல்களை செய்து வருகிறார்.

நடிகை சமந்தா இயக்குநர் குணசேகரின் புராண கால திரைப்படமான சகுந்தலையில் விரைவில் நடிக்கவுள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே