ஓடிடி-யில் வெளியாகும் கே.எஸ்.ரவிக்குமார் படம்!

இயக்குநரும் நடிகருமான கே.எஸ்.ரவிக்குமார் நடித்திருக்கும் புதிய படம் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

இயக்குநரும் நடிகருமான கே.எஸ்.ரவிக்குமார் நடித்திருக்கும் புதிய படம் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

கொரோனா வைரஸால் திரையரங்குகள் மூடப்பட்டதைத் தொடர்ந்து, தமிழ் சினிமா தயாரிப்பாளர்களின் பார்வை ஓடிடி தளங்கள் மீது திரும்பியது. இதில் முன்னணி நடிகரான சூர்யா நடித்திருந்த சூரரைப்போற்று திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகி மற்றவர்களுக்கும் நம்பிக்கை தந்தது. பின்னர் ஊரடங்கில் தளர்வுகள் ஏற்படுத்தப்பட்டு திரையரங்குகள் திறக்கப்பட்டன. அதனால் பொங்கலுக்கு விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் திரையரங்கில் வெளியானது. இருப்பினும் அடுத்த 16 நாட்களில் ஓடிடி-யிலும் வெளியானது.

அந்த வகையில் பிரபல ஓடிடி தளமான ஜீ5-ல் கடந்தாண்டு ‘லாக்கப்’, ‘கபெ.ரணசிங்கம்’, ‘முகிலன்’, ‘ஒரு பக்க கதை’ ஆகிய படங்கள் வெளியானது. தற்போது ’மதில்’ என்னும் திரைப்படம் வெளியாக இருக்கிறது. இப்படத்தில் இயக்குநரும், நடிகருமான கே.எஸ்.ரவிகுமார் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இயக்குநர் மித்ரன் ஜவஹர் இயக்கியுள்ள இந்த படத்தை எஸ்.எஸ்.குரூப்பின் உரிமையாளர் சிங்கா சங்கரன் தயாரித்துள்ளார். கே.எஸ்.ரவிக்குமாருடன் இணைந்து படத்தில் மைம் கோபி, ‘பிக்பாஸ்’ மதுமிதா, காத்தாடி ராமமூர்த்தி, ‘லொள்ளு சபா’ சாமிநாதன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

கடினமாக உழைத்து, சேமித்து அதன் மூலம் சொந்த வீடு கட்ட முயற்சிக்கும் அனைவரின் கதை தான் இது. ஏப்ரல் 14 அன்று மதில் திரைப்படம் ஜீ5 தளத்தில் வெளியாகவுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே