ஆந்திராவில் அப்துல் கலாமின் பெயரில் வழங்கப்பட்டு வந்த மாநில அரசின் விருதின் பெயரை தனது தந்தையின் பெயரில் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி மாற்றியது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அந்த அறிவிப்பை அவர் திரும்பப்பெற்றார்.
ஆந்திர மாநிலத்தில் பத்தாம் வகுப்பில் சிறந்து விளங்கும் மாணவ மாணவியருக்கு மறைந்த குடியரசுத்தலைவர் அப்துல்கலாம் பெயரில் அப்துல் கலாம் பிரதீபா வித்யா புரஸ்கார் விருது வழங்கப்பட்டு வருகிறது.
முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவின் ஆட்சிக்காலத்தில் ஆண்டுதோறும் தேசிய கல்வி தினமாக நவம்பர் 11ஆம் தேதி இந்த விருது வழங்கப்படுகிறது.
இந்நிலையில், ஆந்திராவுக்கு முதல்வராக இருக்கும் ஜெகன்மோகன் ரெட்டி இந்த விருந்தின் பெயரை மாற்றினார்.
அப்துல் கலாமின் பெயரை நீக்கிவிட்டு தனது தந்தையும், மறைந்த முதலமைச்சருமான ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் பெயரை சூட்டினார்.
அதாவது ஒய்.எஸ்.ஆர். வித்யா புரஸ்கார் என்று பெயர் மாற்றம் செய்தார்.
இது சர்ச்சையை கிளப்பியுள்ளது. பெயர் மாற்றம் செய்து அப்துல் கலாமை ஜெகன்மோகன் ரெட்டி அவமதித்து விட்டதாக முன்னாள் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு ட்விட்டரில் விமர்சித்தார்.
பாஜக அரசும் கண்டனம் தெரிவித்திருந்தது.
சமூக வலைதளங்களில் #YSRCPInsultsAPJAbdulKalam என்ற ஹாஷ்டேக்கில் எதிர்ப்பு பகிரப்பட்டது.
இந்நிலையில், தனது அறிவிப்பை ஜெகன்மோகன் ரெட்டி திரும்பப் பெற்றதாக தகவல் வெளியானது.