அதிமுக தொண்டர்களை சீண்டினால் அதன் பின் விளைவுகள் மோசமாக இருக்கும் என, தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற தமிழக அரசு சுமார் ரூ.68 கோடி இழப்பீட்டுத் தொகையை சிட்டி சிவில் நீதிமன்றத்தில் இன்று (ஜூலை 25) செலுத்தியது.
இதன் மூலம் அந்த இல்லம் அரசுடைமையானது. இதையடுத்து, இதுதொடர்பாக மேல்முறையீடு செய்து ஜெயலலிதாவின் இல்லத்தை மீட்போம் என, ஜெ.தீபா தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், “வரலாற்று சிறப்புமிக்க தலைவர் ஜெயலலிதா.
எவ்வளவோ திட்டங்களை ஜெயலலிதா நிறைவேற்றியுள்ளார். அன்னை தெரசாவே ஜெயலலிதாவை பாராட்டினார்.
ஜெயலலிதா வாழ்ந்த இடம் நினைவில்லமாக மாற்றப்பட வேண்டும் என்பதுதான், தமிழக மக்களின், அதிமுக, மாற்றுக் கட்சியினரின் எண்ணம்.
அதனால் தான், அவர் வாழ்ந்த இடம் நினைவில்லமாக்கப்படும் என்றும், அவர் அடக்கம் செய்யப்பட்ட இடம் நினைவிடமாக மாற்றப்படும் என்றும் முதல்வர் பழனிசாமி அறிவித்தார்.
இல்லத்தை நினைவில்லமாக்க வேண்டும் என்ற மக்களின் ஆசை நிறைவேற்றப்பட்டுள்ளது. இது எல்லோரும் போற்றப்படக்கூடிய விஷயம்.
68 கோடி ரூபாய் டெப்பாசிட் செய்துள்ளோம். மற்றவர்கள் நீதிமன்றம் செல்வதை எங்களால் தடுக்க முடியாது. எங்களின் கடமையை நாங்கள் நிறைவேற்றியுள்ளோம்.
அறக்கட்டளைதான் இந்த நினைவில்லத்தை நிர்வகிக்கும் என, நீதிமன்ற உத்தரவின்படி முதல்வர் இன்று உத்தரவிட்டுள்ளார்.
தொண்டர்கள் அனைவரும் கோயிலாக நினைக்கக்கூடிய இடம் அந்த இல்லம். அதனை நினைவில்லமாக்க ஒத்துழைப்பு தர வேண்டும். அதனால், அவருடைய வாரிசுகள் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்” என்றார்.
இதையடுத்து, புதுச்சேரியில் எம்ஜிஆர் சிலை அவமதிக்கப்பட்டது தொடர்பான செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், “முதல்வர், துணை முதல்வர் இதற்குக் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துள்ளனர்.
வாக்கு அரசியலுக்காக இத்தகைய கீழ்த்தரமான செயலை யார் செய்திருந்தாலும் மன்னிக்க முடியாத குற்றம் தான்.
அதிமுக தொண்டர்களை, எம்ஜிஆர் தொண்டர்கள் – ரசிகர்களை சீண்டினால் அதன் பின் விளைவுகள் மோசமாக இருக்கும்” என்றார்.
இ-பாஸ் இன்றி கேளம்பாக்கம் சென்ற ரஜினியின் வாகனம் ஏன் பறிமுதல் செய்யப்படவில்லை என செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர்.
அதற்கு பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், “சட்டத்தின் முன் அனைவரும் சமம். பாரபட்சம் கிடையாது. சட்டம் தன் கடமையை செய்திருக்கிறது. விதிமுறைகளின்படியே அபராதம் விதிக்கப்பட்டுள்ளது” என்றார்.