ராமதாஸ் கூறிய கருத்துக்கும், தேர்தல் கூட்டணிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை! – அமைச்சர் கடம்பூர் ராஜூ

ராமதாஸ் கூறிய கருத்துக்கும், கூட்டணிக்கும் எந்த தொடர்பும் இல்லை என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலின் போது அதிமுக-பாமக இடையே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது.

தொடர்ந்து அதிமுக கூட்டணியில் ,பாமக இருந்து வருகிறது.இதனிடையே பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட பதிவில், ஆந்திரத்தில் ஜெகன்ரெட்டி சொன்னதை செய்கிறார்; சொல்லாததையும் செய்கிறார்.

ஆனால், இங்குள்ள ஆட்சியாளர்கள் மக்களின் கோரிக்கைகள் குறித்து எதையும் சொல்ல மறுக்கிறார்கள். சொன்னாலும் அதை கண்டு கொள்வதில்லை.செய்யவும் மறுக்கிறார்கள் என்று பதிவிட்டார்.

ஆனால் இவரது கருத்து அதிமுக கூட்டணியில் சற்று சலசலப்பை ஏற்படுத்தியது என்றே கூறலாம்.

இது குறித்து அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில் , “தமிழகத்தில் அதிமுக ஆட்சி சிறப்பாக நடைபெறுகிறது . தேர்தல் நேரத்தில், கூட்டணி கட்சிகள் தங்கள் முன்னிறுத்திக் கொள்ள இப்படி செய்வார்கள். அதை பொருட்படுத்தவேண்டாம்.

தற்போது வரை கூட்டணியில், எந்த பிளவும் இல்லை” என்று கூறினார்.

இந்நிலையில் அமைச்சர் கடம்பூர் ராஜு கூறுகையில், “ஒவ்வொரு தேர்தல் காலத்திலும் அரசின் நடவடிக்கைகள் குறித்து ராமதாஸ் பேசுவது வழக்கம் தான். ராமதாஸ் கூறிய கருத்துக்கும், கூட்டணிக்கும் எந்த தொடர்பும் இல்லை ” என்று தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே