சென்னையில் புறநகர் ரயில் சேவையைத் தொடங்க வேண்டும் என்று ரயில்வே அமைச்சருக்கு முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.
கரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்ட போது, தமிழகத்தில் ரயில் சேவையும் முடங்கியது.
இந்த நிலையில், மாநிலங்களுக்கு இடையேயான சிறப்பு ரயில்களும், மெட்ரோ ரயில் சேவையும் கடந்த மாதம் தொடங்கிய நிலையில், தற்போது புறநகர் ரயில் சேவையை தொடங்குமாறு வலியுறுத்தி மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயலுக்கு, தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.
அதில், சென்னையில் புறநகர் ரயில் சேவையை தொடங்க உத்தரவிடுமாறு ரயில்வே அமைச்சரை வலியுறுத்தியுள்ளார்.
சென்னை மற்றும் புறநகர் ரயில் சேவையை தொடங்க வலியுறுத்தி ஏற்கனவே தமிழக அரசு சார்பில் அக்டோபர் 2-ம் தேதி கடிதம் எழுதியிருந்ததையும் முதல்வர் பழனிசாமி இந்தக் கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
புறநகர் ரயில் சேவையை தொடங்குவதன் மூலம் பொதுமக்களுக்கு பேருதவியாக இருப்பதோடு; பொருளாதாரத்தை மீட்டெடுக்கவும் புறநகர் ரயில் சேவை பெரிதும் உதவும் என்றும் கடிதத்தில் முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.