திமுகவின் புதிய பொதுச்செயலாளர் ஆகிறாரா துரைமுருகன்?

திமுக பொதுச்செயலாளர் க. அன்பழகன் மறைவைத் தொடர்ந்து, அவரது பதவி காலியாகியுள்ளதால், திமுக உயர்மட்டக் குழு கூட்டம் விரைவில் கூடி புதிய பொதுச் செயலாளரைத் தேர்ந்து செய்யும் எனத் தகவல் வெளியாகி உள்ளது.

திமுகவின் பொதுச்செயலாளராக 43 ஆண்டுகள் பதவி வகித்த ேராசிரியர் க.அன்பழகன் காலமானார்.

இதையடுத்து, அவரது உடலுக்கு பல்வேறு கட்சிகளின் தலைவர்களும், ஆயிரக்கணககான திமுக தொண்டர்களும் அஞ்சலி செலுத்தினர்.

பேராசிரியர் அன்பழகனின் இறுதி ஊர்வலத்தில், திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட கட்சியின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

க. அன்பழகன் மறைவால், திமுகவின் அதிகாரமிக்க பொறுப்பான பொதுச்செயலாளர் பதவி காலியாகியுள்ளது.

கட்சியின் முக்கிய அறிவிப்புகள் அனைத்தும் பொதுச்செயலாளர் மூலமாகவே வெளிவரும் எனபதால், புதிய நபரை உடனடியாக தேர்வு செய்ய வேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது.

திமுகவின் கட்சி விதிகளின்படி தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் போன்ற முக்கிய பொறுப்புகள் நியமனம் செய்யப்படாமல் தேர்தல் மூலமாகவே தேர்வு செய்யப்படுகிறது.

திமுகவின் உட்கட்சி தேர்தல் தற்போதுதான் தொடங்கியுள்ளதால், அது முடிவதற்கு முன்பாகவே பொதுக்குழுவை கூட்ட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

பேராசிரியர் அன்பழகன் மறைவுக்கு ஒருவார காலம் துக்கம் கடைபிடிக்கப்படும் நிலையில், அது முடிந்தவுடன் உயர்மட்டக்குழுவை கூட்டவும், அதைத் தொடர்ந்து பொதுக்குழுவை கூட்டவும் திமுக தலைமை முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

திமுகவின் அடுத்த பொதுச்செயலாளராக துரைமுருகனும், பொருளாளராக எ.வ.வேலுவும் தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

பொருளாளர் பதவிக்கு கே.என்.நேரு, ஐ.பெரியசாமி மற்றும் பொன்முடி ஆகியோரும் போட்டியில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே