சென்னை: ஐபேக் நிறுவனம் மேற்கொண்டு சர்வே முடிவுகளினால் திமுக தலைவர் ஸ்டாலின் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
தமிழகத்தில் தேர்தல் காலம் மெல்ல, மெல்ல வேகம் எடுக்க ஆரம்பித்துள்ளது. எப்படியும் இந்த முறை ஆட்சியை பிடிக்க அழகாக அரசியல் காய்களை நகர்த்தி வருகிறது. அதற்காகவே தேர்தல் வித்தகரான பிரசாந்த் கிஷோரை ஆலோசகராக திமுக நியமித்துள்ளது.
அவருடைய ஐபேக் நிறுவனத்துடன் திமுக ஒப்பந்தம் செய்துள்ளது. சென்னையில் அதற்கான அலுவலகமும் தொடங்கப்பட்டு, அவர்களுடன் திமுகவின் ஐடி விங்கும் கைகோர்த்து செயல்படுகிறது. இவ்விரு அணிகள் இடையே அவ்வப்போது முரண்பாடுகள் இருந்தாலும் தேர்தல் பணிகள் திமுவிகவில் ஜரூராக நடைபெற்று வருகிறது.
திமுகவில் இருந்து விபி துரைசாமி, சிட்டிங் எம்எல்ஏ கு.க. செல்வம் இருவரும் பாஜக முகாமுக்கு தாவ, அறிவாலயம் தகிக்க ஆரம்பித்து இருக்கிறது. இப்படி அரசியல் காய் நகர்த்தல்கள் ஒரு பக்கம் தகிக்க… மறுபக்கம் ஐபேக் எடுத்துள்ள சர்வே ரிசல்ட் ஸ்டாலினுடன் ஒப்படைக்கப்பட்டுள்ளதாம்.
அதன் உள்ள விவரங்கள், முடிவுகளை கண்டு ஏக குஷியாக நிர்வாகிகளிடம் மனம் விட்டு பேசி உள்ளாராம் ஸ்டாலின். அந்த முடிவுகள் இப்படித்தான் ஸ்டாலின் கைகளில் கொடுக்கப்பட்டுள்ளதாக சில தகவல்கள் லீக்காகி உள்ளன.
இப்போது கொரோனா சீசன் என்பதால் களத்தில் நேரடியாக அனைத்து தரப்பு மக்களை சந்திக்க முடியாத சூழல். அதற்காக தமது செயல்பாடுகளில் சில மாற்றங்களை செய்து ஐபேக் சர்வே எடுத்துள்ளது. அதாவது, தகவல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தியும், போன் வழியாகவும் சர்வே எடுக்கப்பட்டுள்ளதாம்.
கிட்டத்தட்ட அனைத்து மாவட்டங்களிலும் இந்த சர்வேக்கள் கடுமையாக வொர்க் அவுட் செய்யப்பட்டுள்ளனவாம். அதில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு 200 தொகுதிகளுக்கு அதிகமாக இடங்கள் கிடைக்கும். திமுக இதுவரை பெற்றிராத வெற்றி இந்த முறை கிடைக்க போகிறது என்றும் அந்த சர்வே முடிவுகளில் நோட் போடப்பட்டு ஸ்டாலினிடம் தரப்பட்டு உள்ளதாம்.
சர்வே விவகாரம் கட்சியின் முக்கிய தலைவர்கள் வழியாக, கூட்டணி கட்சியினருக்கும் தெரிவிக்கப்பட, அவர்களும் சந்தோஷத்தில் இருக்கின்றனராம். திமுக கூட்டணியின் இந்த முன்னேற்றம் அப்படியே நீடிக்குமா? அல்லது குறையுமா? என்பது அடுத்தக்கட்டமாக ஐபேக் நிறுவனம் தரும் மற்றொரு சர்வேயில் தெரிய வரும் என்று அறிவாலய தகவல்கள் தெரிவிக்கின்றன.