ஞானவேல் ராஜாவை கைது செய்ய இடைக்கால தடை

பண மோசடி வழக்கில் திரைப்படத் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவை வரும் ஆக. 14 வரை கைது செய்ய தடை விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ராமநாதபுரத்தில் நிதி நிறுவனம் ஆரம்பித்து ரூ.3 கோடி வரை மோசடி செய்யப்பட்டது தொடர்பாக துளசி மணிகண்டன் என்பவர் அளித்த புகாரின் பேரில் நீதிமணி, மேனகா மற்றும் ஆனந்த் ஆகியோர் மீது ராமநாதபுரம் பஜார் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் விசாரணைக்கு ஆஜராகுமாறு சினிமா தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவுக்கு போலீஸார் சம்மன் அனுப்பினர்.

விசாரணைக்கு ஆஜராவதில் விலக்கு கோரி ஞானவேல் ராஜா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அந்த வழக்கில் இன்று விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என ஞானவேல்ராஜாவுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

இந்நிலையில் மோசடி வழக்கில் முன்ஜாமீன் கேட்டு ஞானவேல்ராஜா உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார். அதில், மகாமுனி படம் தருண் பிக்சர்ஸ் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது.

அந்த நிறுவனத்தின் பங்குதாரரில் ஒருவரான நீதிமணிக்கு, மகாமுனி திரையரங்கு உரிமை ரூ. 6.25 கோடிக்கு வழங்கப்பட்டது.

இதில் ரூ. 2.30 கோடி வழங்கப்பட்டுள்ளது. ரூ.3.95 கோடி வழங்க வேண்டும். இந்நிலையில் நீதிமணி மீதான பண மோசடி புகாரில் தவறுதலாக என்னையும் சேர்த்துள்ளனர்.

எனக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதி பாரதிதாசன் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில், மனுதாரர் காவல் நிலையத்தில் ஆஜராகும் போது அவரை கைது செய்யாமல் இருக்க முன்ஜாமீன் வழங்க வேண்டும் எனக் கூறப்பட்டது.

இதையடுத்து ஞானவேல்ராஜாவை ஆகஸ்ட் 14 வரை கைது செய்யக்கூடாது என உத்தரவிட்டு விசாரணையை அன்றைக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே