மகளிர் சுய உதவிக் குழுக்களிடம் கடனைக் கேட்டுக் கட்டாயப்படுத்தும் நிறுவனங்கள்: தமிழக அரசு, ரிசர்வ் வங்கிக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

மகளிர் சுய உதவிக் குழுக்கள் பெற்ற கடன்களைத் திருப்பிச் செலுத்தக் கட்டாயப்படுத்தும் சிறு கடன் நிறுவனங்களுக்கு எதிராகப் புகார் அளிக்க மாவட்ட வாரியாக தனி அதிகாரிகளை நியமிக்கக் கோரி வழக்குத் தொடரப்பட்டது.

இதில் தமிழக அரசும், ரிசர்வ் வங்கியும் 4 வாரத்தில் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கரோனா பாதிப்பு மற்றும் ஊரடங்கு காரணமாக கடன் தவணை மற்றும் வட்டியைச் செலுத்த இந்திய ரிசர்வ் வங்கி 6 மாத காலம் அவகாசம் வழங்கியுள்ளது.

ஆனால், மகளிர் சுய உதவிக் குழுக்களுக்குக் கடன் கொடுத்த சிறு கடன் நிறுவனங்கள் கடன் தொகையைத் திருப்பிச் செலுத்த வேண்டுமெனக் கட்டாயப்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இந்நிலையில் இது தொடர்பாக அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளரான சுகந்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தொடர்ந்துள்ளார்.

அவரது மனுவில், ‘ரிசர்வ் வங்கி உத்தரவிற்கு முரணாகக் கடனை வசூலிக்கும் சிறு கடன் நிறுவனங்களுக்கு எதிராக மகளிர் சுய உதவிக் குழுக்கள் அளிக்கும் புகார்களைப் பெற மாவட்ட வாரியாக தனி அதிகாரிகளை நியமிக்க வேண்டும்.

கடன் தொகை மற்றும் வட்டியைச் செலுத்துவதற்கான காலக்கெடுவை செப்டம்பர் 2020 முதல் பிப்ரவரி 2021 வரை நீட்டிக்க வேண்டும் என தமிழக அரசுக்கும், ரிசர்வ் வங்கியின் மண்டல இயக்குனருக்கும் உத்தரவிட வேண்டும்.

சிறு கடன் நிறுவனங்கள் மூலம் கடன் பெறும் சுய உதவிக் குழுக்கள் அதன் உறுப்பினர்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் முதல் 40 ஆயிரம் ரூபாய் வரை பிரித்துக் கொடுக்கின்றன.

அதை உறுப்பினர்கள் தங்கள் வருமானத்திற்கு ஏற்ப வாரத் தவணையாகவோ, மாதத் தவணையாகவோ ஆயிரம் ரூபாய் முதல் மூவாயிரம் ரூபாய் வரை திருப்பிச் செலுத்துகிறார்கள்.

அவ்வாறு சேகரிக்கப்பட்ட தொகை மூலம் கடன் அடைக்கப்படும்.

ஆனால், ஊரடங்கு காரணமாக வருமானமில்லாமல் உறுப்பினர்கள் தவித்துவரும் நிலையில், கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டுமென சிறு கடன் நிறுவனங்கள் கட்டாயப்படுத்துகின்றன’ என்று தெரிவித்திருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் சுந்தரேஷ், ஹேமலதா அமர்வில் விசாரணைக்கு வந்தது.

வழக்கு குறித்து தமிழக அரசும், ரிசர்வ் வங்கியும் 4 வாரத்தில் பதிலளிக்க உத்தரவிட்டனர்.

மேலும், ஊரக வளர்ச்சித் துறையை எதிர்மனுதாரராகச் சேர்க்கும்படி மனுதாரர் தரப்புக்கும் உத்தரவிட்டுள்ளனர்.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே