சேலம் கந்தம்பட்டி இளம்பிள்ளை சாலை சந்திப்பில் நான்கு வழிச்சாலையில் புதிய மேம்பாலத்தை தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி இன்று (புதன்கிழமை) திறந்து வைத்தார்.
சேலம் – கோவை தேசிய நெடுஞ்சாலை வழியே தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.
இந்த கந்தம்பட்டி பைபாஸ் பகுதியை சிவதாபுரம் சித்தர் கோயில், சோளம்பள்ளம் உள்ளிட்ட பல்வேறு ஊர்களைச் சேர்ந்த பொதுமக்கள் கடந்து சென்று வந்தனர்.
இந்நிலையில் கந்தம்பட்டி பைபாஸ் பகுதியில் ஏராளமான வாகனங்கள் சென்று வரும் போது அடிக்கடி சாலை விபத்துக்கள் ஏற்பட்டு வந்தது. கடந்த 10 வருடங்களில் நூற்றுக்கும் மேற்பட்டோர் விபத்துகளில் சிக்கி பலியாகி உள்ளனர்.
இதை அறிந்த தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி கடந்தாண்டு ரூ.33 கோடி நிதியில் மேம்பாலம் கட்ட நிதி ஒதுக்கினார். பின்னர் பாலம் கட்டும் பணி இரவு பகலாக நடைபெற்றது.
தற்போது பொதுமக்கள் பயன்பாட்டுக்காக மேம்பாலத்தை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி திறந்து வைத்தார்.
பின்னர் மேம்பாலம் வழியே அரசு பேருந்துகள் செல்வதை முதல்வர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இதே விழாவில் அயோத்தியாப்பட்டணம் பேளூர் கிளாக்காடு சாலை பகுதியில் ரூ.3 கோடி மதிப்பில் கட்டப்பட்ட புதிய உயர்மட்ட பாலத்தையும் தமிழக முதல்வர், பொதுமக்கள் பயன்பாட்டுக்காக திறந்து வைத்தார்.