மனித உரிமைகள் என்ற பெயரில் செயல்படும் சங்கங்கள் குறித்து விசாரிக்க மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இது குறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யுமாறு தமிழக டிஜிபிக்கும், பதிவுத்துறை ஐ.ஜிக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
மனித உரிமை என்ற பெயரை பயன்படுத்தி சங்கங்கள் மற்றும் அமைப்புகள் அமைக்க தடை விதித்து 2010ம் ஆண்டு திருத்தம் கொண்டு வரப்பட்டது. இருப்பினும் சர்வதேச மனித உரிமை ஆணையம், மனித உரிமை அமைப்பு என்ற பெயரில் சங்கங்களை பதிவு செய்து, பெரிய அளவில் விளம்பர பலகைகள் வைக்கப்பட்டிருப்பதாக புகார் எழுந்தது.
இது குறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யும்படி மாநில மனித உரிமை ஆணையத்தின் பொறுப்பு தலைவர் உத்தரவு பிறப்பித்துள்ளார். அந்த உத்தரவில் கட்டப்பஞ்சாயத்து நடத்தி அப்பாவி மக்களிடம் பணம் பறிப்பதாகவும், அதிகாரிகளை மிரட்டி வருவதாகவும் தகவல் வந்துள்ளன. இது தொடர்பாக விசாரணை முடித்து 4 வார காலங்களுக்குள் அறிக்கை அளிக்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.