வரும் வாரங்களில் கொரோனாவின் கோரத்தாண்டவம் மிக மோசமாக இருக்கும் – மத்திய அரசு

நாடு முழுவதும் கொரோனாவின் இரண்டாம் அலையின் பரவல் அதி தீவிரமாக இருக்கிறது. நாளொன்றுக்கு தொற்று பாதிப்பு 3 லட்சத்தைத் தாண்டிவிட்டது.

பெரும்பான்மையான நாடுகளில் கொரோனா பரவல் குறைந்துவரும் சூழலில், இந்தியாவில் நிலைமை மோசமாகிக் கொண்டே செல்கிறது.

இது ஒருபுறம் என்றால் ஆக்சிஜன் பற்றாக்குறை பிரச்சினை தலைவிரித்தாடுகிறது. டெல்லி, மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநில அரசுகள் விழிபிதுங்கி போயுள்ளன.

எப்படியாவது மக்களைக் காப்பாற்ற வேண்டும் என்பதால் மத்திய அரசிடம் மாநில அரசுகள் ஆக்சிஜனுக்காகக் கையேந்தி நிற்கின்றன. ஆனால் மத்திய அரசோ எதையும் கண்டுகொள்ளாமல் ஆக்சிஜன் அனுப்பாமல் இருப்பதாக டெல்லி அரசு குற்றஞ்சாட்டுகிறது. 

மத்திய அரசின் இந்தப் போக்கை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் டெல்லியில் செயல்பட்டுவரும் பாலாஜி மருத்துவமனை நிறுவனம் சார்பில் வழக்கு தொடரப்பட்டிருக்கிறது.

இந்த வழக்கில் கடந்த விசாரணையின்போதே நீதிமன்றம் மத்திய அரசை மிகக் கடுமையாக சாடியது. இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், ஆக்சிஜன் இல்லாமல் மக்கள் மாண்டு போவதை வேடிக்கை பார்க்க முடியாது; மோசமான சூழலை எதிர்கொள்ள மத்திய அரசிடம் என்ன திட்டம் உள்ளது என்று வினவினார்கள். அப்போது மத்திய அரசு தரப்பில், “அடுத்த சில வாரங்களுக்குக் கொரோனா பரவல் அதி தீவிரமாக இருக்கும்.

மிக மிக மோசம் என்ற கட்டத்தை இந்தியா அடைந்திருக்கிறது. இதனை நாங்கள் மக்களை அச்சப்படுத்துவதற்காகச் சொல்ல வில்லை.

ஆனால் உண்மை நிலவரம் இப்படிதான் இருக்கிறது. ஆகவே அனைத்து மாநில அரசுகளும் மக்களும் நிலைமையை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும்” என்று விளக்கம் அளிக்கப்பட்டது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே