அரசியல் நிலைப்பாடு தொடர்பான எனது முடிவை விரைவில் அறிவிப்பேன் – ரஜினிகாந்த்

ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் அரசியல் வருகை குறித்து ஆலோசனையில் ஈடுபட்ட நடிகர் ரஜினி, ‘அரசியல் கட்சி துவங்குவது குறித்து நான் முடிவெடுக்கிறேன்; அதுவரை பொறுத்திருங்கள்,’ என தெரிவித்ததாக கூறப்படுகிறது.

அரசியல் வருகை குறித்து நடிகர் ரஜினி தனது மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் இன்று (நவ.,30) சென்னையில் உள்ள தனது ராகவேந்திரா மண்டபத்தில் ஆலோசனையில் ஈடுபட்டார்.

ஆலோசனை கூட்டத்தில், சில மாவட்ட செயலாளர்களின் செயல்பாடுகள் திருப்தி இல்லை என தெரிவித்த ரஜினி, ‘என் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் சில நிர்வாகிகள் செயல்படுகின்றனர்;

அதற்கான ஆதாரங்கள் என்னிடம் உள்ளன. என்னுடன் இருந்தால் சம்பாதிக்க முடியாது, மக்களுக்காக உழைக்க வேண்டும். 

பலமுறை எச்சரித்தும், சிலர் என் பேச்சுக்கு செவி கொடுக்கவில்லை,’ என்றார்.

மேலும், ‘தேர்தலுக்கு முன் கட்சி தொடங்கலாமா? தனித்து போட்டியிடலாமா அல்லது கூட்டணியுடனா? மக்கள் மன்றத்தின் செயல்பாடுகளை பொதுமக்கள் எப்படி பார்க்கின்றனர்? கட்சி தொடங்கினால் மக்களின் வரவேற்பு எப்படி இருக்கும்?

கொரோனா பரவலுக்கு இடையே பரப்புரை செய்வது எப்படி? போன்ற கேள்விகளை நிர்வாகிகளிடம் முன்வைத்ததாக கூறப்படுகிறது. இதற்கு நிர்வாகிகள் ஒவ்வொருவராக அரசியல் குறித்து கருத்துகளை கூறிவந்தனர். தொகுதி வாரியாக பூத் கமிட்டிகள் அமைக்கப்பட்டுள்ளதை நிர்வாகிகள் எடுத்துரைத்தனர்.

மேலும், ரஜினி உடனடியாக கட்சியை தொடங்க வேண்டும் என மக்களிடையே எழுச்சி ஏற்பட்டுள்ளதாகவும், முதல்வர் வேட்பாளராக ரஜினியே இருக்க வேண்டும் எனவும் மன்ற நிர்வாகிகள் வலியுறுத்தியுள்ளனர்.

இதற்கு ரஜினி, ‘இன்னும் அதிகமாக உழைத்தால் மட்டுமே அடுத்த கட்டத்திற்கு செல்ல முடியும். அரசியல் கட்சி துவங்குவது குறித்து நான் முடிவெடுக்கிறேன்; அதுவரை பொறுத்திருங்கள்,’ என தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதனையடுத்து வரும் ஜனவரியில் ரஜினி கட்சியை தொடங்குவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகலாம்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே