ரஜினிகாந்த் விரும்பினால் அவருக்கு சட்டப்பூர்வ உதவிகளைச் செய்வேன் என்று பா.ஜ.க எம்.பி சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.
சென்னையில் நடைபெற்ற துக்ளக் வார இதழின் 50-வது ஆண்டு விழாவில் பேசிய ரஜினிகாந்த், பெரியார் நடத்திய மாநாட்டில் ராமர் மற்றும் சீதா நிர்வாணமாக இருப்பது போன்ற படம் கொண்டுவரப் பட்டு அந்தப் படத்தை பெரியார் செருப்பால் அடித்தார்.
அதுதொடர்பாக செய்தி வெளியிட்ட துக்ளக் இதழுக்கு கருணாநிதி அரசு தடைவிதித்தது என்று பேசியிருந்தார்.
அவருடைய பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியது.
மேலும், பெரியாரின் மாநாட்டில் ராமரின் நிர்வாணப் படம் கொண்டுவரப் படவில்லை என்றும்; பெரியார் ராமர் படத்தை செருப்பால் அடிக்கவில்லை என்று பெரியாரிய இயக்கத்தினர் விளக்கமளித்தனர்.
மேலும் இதுதொடர்பாக ரஜினிகாந்த் மன்னிப்பு கேட்கவேண்டும் என்று வலியுறுத்தினர்.
ஆனால், இன்று செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த், மன்னிப்பு கேட்க முடியாது என்று திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார்.
எனவே, ரஜினிக்கு எதிராக அவதூறு வழக்குத் தொடர்வதற்கான வாய்ப்புகள் இருக்கிறது.
இந்தநிலையில், செய்தியாளர்களுக்கு அளித்தப் பேட்டியில், ரஜினிகாந்த் விரும்பினால் அவருக்கு நான் சட்டப்பூர்வ உதவிகள் செய்வதற்கு தயாராக உள்ளேன்.
ரஜினிகாந்த் மிகப் பெரிய நடிகர் அவரால் எந்த வழக்கறிஞரையும் வாதாட அழைக்க முடியும் என்று இருந்தாலும் நான் அவருக்காக இலவசமாக வாதாட தயாராக உள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.