“இப்போது இருக்கும் வாழ்க்கையை அவ்வளவு ரசிக்கிறேன்” – ரவிசந்திரன் அஸ்வின்!

ஒருநாள், டி20 போட்டி அணிகளில் இடம்பெறுவது குறித்து யோசித்ததில்லை, இப்போது நான் நிறைவாகவே உணர்கிறேன் என்று இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிசந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலிய, இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பாக பந்துவீசி பல்வேறு சாதனைகளை புரிந்தார் அஸ்வின். இதனையடுத்து அவரை ஒருநாள், டி20 போட்டிகளில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்தன. இது குறித்த கேள்வியை கோலியிடம் முன்வைத்தபோது அஸ்வின் ஒரு நாள், டி20யில் திரும்ப இப்போதுக்கு வாய்ப்பில்லை என தெரிவித்தார்.

இந்நிலையில் ‘இந்தியா டுடே’வுக்கு பேட்டியளித்த அஸ்வின் பல்வேறு விஷயங்களை பகிர்ந்துள்ளார் “எப்போதும் நமக்கு நாமே போட்டியிட வேண்டும். அதில் நான் உறுதியாக இருக்கிறேன். இப்போது நான் அதை சரியாக செய்துக்கொண்டு இருக்கிறேன். என் அனுபவமும் வாழ்க்கையும் நிறையக் கற்றுக்கொடுத்து இருக்கின்றன. உண்மையை சொல்ல வேண்டும் என்றால் இப்போது நான் நிம்மதியாக இருக்கிறேன்” என்றார்.

மேலும் பேசிய அவர் “இப்போது பலரும் நான் ஒரு நாள், டி20 அணியில் இடம்பெறுவது குறித்து கேள்வி எழுப்புகின்றனர். என்னை சுற்றி பல விவாதங்கள் மேற்கொள்ளப்படுகிறது. இவையெல்லாம் எனக்கு நகைச்சுவையாக இருக்கிறது. ஏனென்றால் இப்போதுள்ள நிலையில் நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். என்னுடைய வாழ்க்கையை அவ்வளவு ரசிக்கிறேன்” என்றார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே