சிபி-சிஐடி அதிகாரிகள் மிரட்டியதால் சாத்தான்குளம் வீடியோவை நீக்கினேன்: சுசித்ரா

சாத்தான்குளம் விவகாரம் தொடர்பாக தான் ட்விட்டரில் வெளியிட்ட வீடியோவை பாடகி சுசித்ரா நீக்கியுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் இருக்கும் சாத்தான்குளத்தில் கடையை கூடுதல் நேரம் திறந்து வைத்தது தொடர்பாக கைது செய்யப்பட்டு கோவில்பட்டி சிறையில் அடைக்கப்பட்ட ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் உயிரிழந்தார்கள். சிறையில் அவர்களை போலீசார் அடித்துக் கொடுமைப்படுத்தியதாக புகார் எழுந்தது.
இந்நிலையில் சிறையில் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸை நிர்வாணப்படுத்தி, நெஞ்சில் இருந்த முடியை பிடுங்கி, லத்தியால் அவர்களை சித்ரவதை செய்ததாக பாடகி சுசித்ரா ஆங்கிலத்தில் விவரித்து வீடியோ வெளியிட்டார். ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸின் ரத்தக்கறை படிந்த ஆடையை அவர்களின் வீட்டிற்கு மூன்று முறை அனுப்பி வைத்து மாற்றுத் துணி வாங்கியதாகவும் சுசித்ரா தெரிவித்தார். அந்த வீடியோ வைரலாகி ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸுக்கு நீதி வேண்டும் என்று வெளிநாட்டவர்கள் கூட ட்வீட் செய்தார்கள்.

ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் வழக்கை சிபிஐ அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள். இந்நிலையில் சாத்தான்குளம் விவகாரம் தொடர்பாக சுசித்ரா வெளியிட்ட வீடியோவில் தெரிவிக்கப்பட்டுள்ளது உண்மை இல்லை என்று சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழக கிரைம் பிரிவு போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

பாடகி சுசித்ரா அண்மையில் சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக வீடியோ ஒன்றை வெளியிட்டார். அந்த வீடியோவில் சுசித்ரா கூறியிருப்பது ஆதாரமற்றது, மேலும் அது உண்மை இல்லை. வீடியோவில் அவர் பொய்யாக மிகைப்படுத்தி பேசியிருக்கிறார்.
அவர் தெரிவித்துள்ள புகார்கள் கற்பனையே, அதற்கு எந்த ஆதாரமும் இல்லை. அந்த வீடியோ மூலம் போலீசார் மீது வெறுப்பு தான் ஏற்படச் செய்கிறது. அத்தகைய வீடியோக்களை நம்ப வேண்டாம் என்று பொது மக்களை கேட்டுக் கொள்கிறோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிபி-சிஐடி அதிகாரிகள் கூறிய பிறகு சுசித்ரா சாத்தான்குளம் விவகாரம் பற்றிய வீடியோவை ட்விட்டரில் இருந்து நீக்கிவிட்டார். இது குறித்து சுசுத்ரா கூறியிருப்பதாவது,

வீடியோவை மறந்துவிடுங்கள். அதன் நோக்கம் நிறைவேறிவிட்டது. இந்த வழக்கில் என்ன நடக்கிறது என்று மட்டும் பாருங்கள். அது தான் மிகவும் முக்கியம்.
வீடியோவை நீக்குவது முக்கியம் இல்லை. நான் வீடியோவில் தெரிவித்த எதுவும் நடக்கவில்லை என்பது பிரேத பரிசோதனை அறிக்கை மூலம் தெரிய வந்ததாக அவர்கள் என்னிடம் கூறியது தான் கவலை அளிக்கிறது. உண்மையான பிரேத பரிசோதனை அறிக்கை முக்கியம். அதன் நகல் கிடைக்கும் வரை ஓய வேண்டாம் என்று மீடியாவை கேட்டுக் கொள்கிறேன் என்றார்.
20 மில்லியன் வியூஸ்களை பெற்ற பிறகு சுசித்ராவின் வீடியோவை நீக்குமாறு தமிழக போலீசார் தெரிவித்துள்ளனர் என்று ஒருவர் ட்வீட் செய்தார். அதை பார்த்த சுசித்ரா கூறியிருப்பதாவது,

திருத்தம்: சிபி-சிஐடி அதிகாரிகள் போன் செய்தார்கள். பொய்யான தகவலை பரப்புவதற்காக கைது செய்வோம் என்று மிரட்டினார்கள். அவர்கள் சொன்னபடி செய்யக்கூடியவர்கள் என்று என் வழக்கறிஞர் கூறியதால் வீடியோவை நீக்கினேன். இந்த வழக்கை அனைவரும் கவனிக்கவும், நிறைய மோசடி நடக்கிறது என்று தெரிவித்துள்ளார்.
சுசித்ராவின் ட்வீட்டுகளை பார்த்தவர்கள், உங்களையே வீடியோவை நீக்க வைத்துவிட்டார்கள். இனி என்னவெல்லாம் செய்யப் போகிறார்களோ. அப்படி என்றால் யாருக்கு என்ன நடந்தாலும் பேசக் கூடாது போன்று. உங்கள் வீடியோ உலகம் முழுவதும் வைரலானதால் இப்படி செய்துவிட்டார்கள் என்று கூறியுள்ளனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே