பொள்ளாச்சி பாணியில் பெண்களை ஏமாற்றிய நாகர்கோவில் காசி சிக்கியது எப்படி?

முகநூல், இன்ஸ்டாகிராம் மூலம் பழகி, 100க்கும் மேற்பட்ட பெண்களை மோசடி செய்த காசி மீது மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

புதிய தொழில் தொடங்குவது போல, இன்ஸ்டாகிராம், முகநூலில் தனது கட்டு மஸ்தான புகைப்படத்துடன் பத்திற்கும் மேற்பட்ட போலி கணக்குகளை காசி தொடங்கியுள்ளார். 

நான்கு ஐந்து ஆண்டுகளாக யாரிடமும் சிக்காமல், பல பெண்களை ஏமாற்றிய காசி, பெண் மருத்துவரை ஏமாற்றிய போது வசமாக போலீசில் சிக்கினார்

போலீசாரிடம் சிக்கிய காசி தனக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதாக நாடகமாடி காவல்நிலையத்தில் அழுது புலம்பியுள்ளார். 

காசியின் பல முகங்களை ஏற்கனவே அறிந்த போலீசார் அவரின் நடிப்பு திறமையைக் கண்டு வியந்து நடித்தது போதும் என்று விசாரணையை தொடர்ந்தனர்

இந்த நிலையில், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு முகநூல் மூலமாக பழகிய காசி, இரண்டு லட்சம் ரூபாய் வரை பணம் பறித்து ஏமாற்றியதாக புதிதாக புகார் வந்துள்ளது. 

கல்லூரியில் படித்தபோது, முகநூல் மூலமாக தொடர்பு கொண்ட காசி, காதல் வசனங்களை பேசி திருமணம் செய்து கொள்வதாக உருகினார் என அப்பெண் புகாரில் தெரிவித்துள்ளார்.

காசியின் குரூர எண்ணம் தெரியாத அப்பெண் காசியுடன் இயல்பாக பழகியுள்ளார். 

அதை தனக்கு சாதகமாக்கிய காசி, அப்பெண் வசதி படைத்த குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதை அறிந்துகொண்டு, தனது காரில் அந்தப் பெண்ணுடன் சுற்றியுள்ளார்

அந்த பெண்ணுடன் தனிமையில் இருப்பதை விளையாட்டாக வீடியோ எடுப்பது போல் வீடியோவும் எடுத்துள்ளார் காசி. 

திடீரென தனது தாய்க்கு புற்றுநோய் வந்து விட்டதாகவும் அதற்கு மருந்து வாங்க வேண்டும் என்றும் நாடகமாகடி ஒரு லட்சம் ரூபாய் வேண்டும் என்று கேட்டு அந்த பெண்ணிடம் இருந்து பணம் பெற்றுள்ளார் காசி.

அதே போன்று திடீர் திடீர் காரணங்களைச் சொல்லி அடிக்கடி பணத்தை கறந்துள்ளார் காசி. 

ஒரு கட்டத்தில் கையில் பணம் இல்லை என்று அந்த பெண் தெரிவித்த போது அவரது தங்கச் சங்கிலியை வாங்கி மோசடி செய்துள்ளார்.

சில நாட்களில் அந்த பெண்ணுக்கு போன் செய்வதை காசி நிறுத்தி கொண்டதுடன், அவர் தொடர்பு கொண்டபோதும் தவிர்த்து வந்துள்ளார். 

காசியால் தாம் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அப்பெண், காசியிடம் கொடுத்த பணத்தை கேட்டுள்ளார்.

அப்போது தான் காசி தனது உண்மையான முகத்தை காட்டியுள்ளார்.

பணத்தை திருப்பிக்கேட்டால், அந்தரங்க வீடியோவை வெளியிட்டு விடுவேன் என்று கூறி காசி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.

இதை தொடர்ந்து செய்வதறியாது இருந்த அந்த கல்லூரி மாணவி, தற்போது காசி போலீசில் சிக்கிய தகவல் அறிந்த பிறகு புகார் அளித்துள்ளார். 

ஏற்கனவே கோட்டாறு காவல்நிலையத்தில் ஒன்பது பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து காசியை கைது செய்த போலீசார் மேலும் ஒரு புதிய வழக்கை பதிவு செய்துள்ளனர்.

என்.எம் நகர் காவல்நிலையத்தில் மோசடி, வழிப்பறி, ஆபாசமாக வீடியோ எடுத்தல் உள்ளிட்ட நான்கு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

கட்டுடல் மோசடி பேர்வழி காசியின் போன் மற்றும் வீட்டில் இருந்த கணினியை போலீசார் பறிமுதல் செய்து விசாரணையை நடத்தி வருகின்றனர்

செல்போனில் இருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில், காசி யாருடன் எல்லாம் தொடர்பில் இருந்தார் என்பது குறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது. 

காசி நட்பு வட்டத்தில் இருந்த, பத்திற்கும் மேற்பட்ட நண்பர்களை தனிதனியாக அழைத்து போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்திவருகின்றனர்.

ஆனால், காசியின் பர்சனல் லேப்டாப் இதுவரை சிக்காமல் இருந்துவந்துள்ளது. அதைக் கைப்பற்ற போலிசார் புது வியூகம் அமைத்தனர். 

காசி தொடர்பான அனைத்து இடங்களிலும் சோதனையிடுவது என்ற திட்டத்தின் அடிப்படையில், காசியின் குடும்பத்திற்கு சொந்தமான கோழிப்பண்ணையில் போலீசார் ஆய்வு நடத்தினர்.

திடீர் சோதனையில், மறைத்து வைக்கப்பட்டிருந்த ரகசிய லேப்டாப் போலீசாரின் கையில் சிக்கியுள்ளது. 

கனிணி, செல்போன் போன்றவற்றிற்கு மூன்றடுக்கு பாஸ்வோர்ட் வைத்து, காசி ரகசியம் காத்து வந்துள்ளார்.

அதனால், ரகசிய பாஸ்வேர்டுகளை உடைத்து, லேப்டாப்பைத் திறந்து போலீசார் ஆய்வு செய்ய முடிவு செய்துள்ளனர். 

காதல் மோசடி மன்னின் பர்சனல் லேப்டாப்பில் பதிவாகியுள்ள விவரங்கள் பூகம்பத்தை ஏற்படுத்தலாம் என்கின்றனர் போலீசார்.

டேல்டாப்பில் காசியுடன் பழகிய பெண்களின் ஏராளமான படங்கள் இருந்ததாக போலீசார் கூறியுள்ளனர். காசியின் நண்பர்கள், அரசியல் பிரமுகர்களின் புகைப்படங்கள் இருப்பதைக்கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இதனால் இச்சம்பவத்தில் அரசியல் பிரமுகர்களுக்கு தொடர்பு உள்ளதா? எனவும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்

இந்நிலையில் காதல் மோசடி மன்னன் காசியால் பாதிக்கப்பட்டவர்கள் 9498111103 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என்று குமரி மாவட்ட போலீசார் அறிவித்துள்ளனர்.

இந்த எண்ணிற்கு தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தவர்களின் தகவல்கள் ரகசியமாக பாதுகாக்கப்படும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே