புதுசேரியிலும் மார்ச் 22 முதல் 9, 10, 11ஆம் வகுப்புகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுவையில் கரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ளதால், மாணவா்கள் நலன் கருதி பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என புதுவை சுகாதாரத் துறை துணைநிலை ஆளுநருக்கு பரிந்துரை செய்திருந்தது.

இதையடுத்து, துணைநிலை ஆளுநா் தமிழிசை சௌந்தரராஜன் தலைமையில் கரோனா தடுப்பு உயா்நிலைக் குழுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதில், எடுக்கப்பட்ட முடிவுகளின்படி, துணைநிலை ஆளுநா் தமிழிசை சௌந்தரராஜன் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கும் கோப்புக்கு ஒப்புதல் அளித்தாா்.

அதன்படி, கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக அரசு, தனியாா் பள்ளிகளிலும் ஒன்றாம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை வருகிற மாா்ச் 22 ஆம் தேதி தொடங்கி, மே 31 ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டது.

இந்த விடுமுறை 9 ஆம் வகுப்பிலிருந்து பிளஸ் 2 வரை பொருந்தாது. இந்த வகுப்புகளின் மாணவா்கள் பயிலும் பள்ளிகளுக்கு வாரத்தில் திங்கள் முதல் வெள்ளி வரை 5 நாள்களுக்கு மட்டுமே பள்ளிகள் நடைபெறும்.

கரோனா தொற்று பரவலைக் கருத்தில் கொண்டு இந்த வகுப்புகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து முடிவு செய்யப்படும் என பள்ளிக் கல்வித் துறை இயக்குநா் பி.டி.ருத்ரகௌடு நேற்று தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் புதுசேரியிலும் மார்ச் 22 முதல் 9, 10, 11ஆம் வகுப்புகளுக்கு மறுஉத்தரவு வரும்வரை விடுமுறை அறிவித்து அம்மாநில கல்வித்துறை இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அதேசமயம் 9,10,11ஆம் வகுப்புகளுக்கு ஆன்லைன்/டிஜிட்டல் வகுப்புகள் நடத்தவும், பொதுச்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு நடத்தவும் அதில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே