இந்தியத் தேர்தல் ஆணையத்துக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்..!!

வேட்புமனுக்களைப் பெறும்போது விழிப்புடன் இருக்க இந்தியத் தேர்தல் ஆணையத்துக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் திருச்செந்தூரைச் சேர்ந்த வழக்குரைஞர் ராம்குமார் ஆதித்தன் தாக்கல் செய்த மனுவில், தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர்கள், வேட்புமனுவுடன் தாக்கல் செய்யும் பிரமாண பத்திரத்தில் வயது, வாக்கு இடம்பெற்றுள்ள தொகுதியின் பெயர், எண், வாக்காளர் பட்டியலில் உள்ள எண் மற்றும் வருமானம், சொத்து விவரங்கள், கடன் விவரங்கள், குற்றப் பின்னணி, கல்வி விவரங்களைத் தெரிவிக்க வேண்டும்.

ஆனால், கடந்த 2019 மக்களவை தேர்தலில் தமிழகத்தில் மொத்தமுள்ள 39 தொகுதிகளில், 37 தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்ற டி.ஆர்.பாலு உள்ளிட்ட எம்.பி.க்களின் வேட்புமனுக்கள் முறையாக தாக்கல் செய்யப்படவில்லை.

முறையாகத் தாக்கல் செய்யப்படாத அந்த வேட்புமனுக்கள் முறையற்ற வகையில் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

நீலகிரி எம்பி ராஜா, பெரம்பலூர் எம்பி பாரிவேந்தர் ஆகியோர் மட்டுமே முறையாக வேட்புமனுக்கள் தாக்கல் செய்துள்ளனர். வேட்புமனுக்களை முறையாக தாக்கல் செய்யாத எம்பிக்களுக்கு எதிராக மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்படி நடவடிக்கை எடுக்கத் தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்.

வேட்புமனுக்கள் முறையாக இருப்பதை உறுதி செய்யும் வகையில் தேர்தல் அதிகாரிகளுக்கு பயிற்சி வழங்கத் தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் தரப்பில், வேட்பாளர்கள் தங்கள் வேட்புமனுக்களில் தொகுதி எண்கள் சரியாக குறிப்பிடவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது.

அப்போது தேர்தல் ஆணையம் தரப்பில், மனுதாரர் குறிப்பிடும் குறைபாடுகள் நிவர்த்தி செய்த பின் தான் வேட்புமனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

எந்த விதிமீறல்களும் நடைபெறவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், தேர்தல் ஆணையம் மிகுந்த விழிப்புடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தினர்.

பின்னர் மனுதாரரின் கோரிக்கையைப் பரிசீலிக்க உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே