மதுரை: கொரோனா தொற்று மிக சவாலான நோயாக இருப்பதாக சுகாதார துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனாவின் தொற்று இன்னமும் குறையவில்லை. நாள்தோறும் பாதிப்பு எண்ணிக்கை 5000ஐ கடந்து வருகிறது. இந் நிலையில் கொரோனா மிகுந்த சவாலான தொற்றாக உள்ளதாக சுகாதார செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறி உள்ளார்.
மதுரையில் கொரோனா தடுப்பு சிறப்பு முகாமில் பங்கேற்றார். பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறி இருப்பதாவது: எங்கு சென்றாலும் மக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். கொரோனா பலி எண்ணிக்கை சற்று உயர்வது போன்ற ஒரு தோற்றம் உள்ளது.
குணமடைந்து வீடு திரும்பினாலும் 7 அல்லது 8வது நாளில் மீண்டும் பரிசோதனை நடத்தப்படுகிறது. கொரோனா தொற்று சவாலான நோய்.
மருத்துவமனைக்கு யார் வந்தாலும் கொரோனா தொற்று உள்ளதா என்று பரிசோதிக்கப்படுகிறது. அதிக சோதனை செய்யப்படுவதால், கொரோனா தொற்று பாதிப்பு சதவீதமும், இறப்பு சதவீதமும் குறைவாக இருக்கிறது என்றார்.