புயலை விட வேகமாக தமிழக அரசு செயல்பட்டது – அமைச்சர் தங்கமணி

அரசின் அதிரடி நடவடிக்கைகளால் நிவர் புயல் பாதிப்பு பெருமளவு தவிர்க்கப்பட்டதாக அமைச்சர் தங்கமணி செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.

திருச்செங்கோட்டில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் தங்கமணி, “நிவர் புயலால் பல மின்கம்பங்கள் விழுந்தது. சுமார் 108 மின்மாற்றிகள் பாதிக்கப்பட்டது.

புயலால் ஏற்பட்டுள்ள சேத மதிப்பு இதுவரை ரூ.15 கோடி என கணக்கிடப்பட்டுள்ளது. முழுமையான தகவல்கள் பின்னர் வெளியிடப்படும்.

புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட இடங்களான கடலூர் மற்றும் விழுப்புரத்தில் துண்டிக்கப்பட்டிருந்த மின் விநியோகம் வழங்கப்பட்டு விட்டது.

இனி வரும் காலங்களில் புயல் மழையால் பாதிக்காத வகையில் புதைவட மின்கம்பிகள் அமைக்கப்படும். நிவர் புயலை விட வேகமாக அரசு செயல்பட்டது ” என தெரிவித்தார்.

கடந்த 25ம் தேதி நிவர் புயல் மரக்காணம் – புதுச்சேரி இடையே கரையைக் கடந்தது. சென்னைக்கு சமீபத்தில் கரையைக் கடந்த இந்த புயல், கடும் பாதிப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அரசின் அதிரடி நடவடிக்கைகளால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது.

முன்னேற்பாடுகள் தீவிரப்படுத்தப் பட்டிருந்ததால் ஒரு நாளிலேயே மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பினர்.

மக்கள் மத்தியில் அச்சுறுத்தலை ஏற்படுத்திய இந்த புயல், பெரும் பாதிப்பை ஏற்படுத்தாத வண்ணம் தடுத்ததற்காக அரசுக்கு மக்கள் பாராட்டுக்கள் தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே