ஊரடங்கு அமலுக்கு உள்ள நிலையில் சென்னையில் உள்ள ஐடி நிறுவனங்கள் கட்டுப்பாடுகளுடன் இயங்கலாம் என்று தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
கொரோனா பரவலை கட்டுப்படுத்த நீட்டிக்கப்பட்டுள்ள ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், பல்வேறு தளர்வுகளும் அளிக்கப்படுகின்றன.
தற்போது மேலும் ஒரு கட்டுப்பாடு தளர்வு குறித்த அறிவிப்பை அரசு வெளியிட்டுள்ளது.
அதில் கூறப்பட்டுள்ளதாவது, கொரோனா தொற்றின் நிலைமையை கருத்தில் கொண்டும், மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டும், சில தளர்வுகளுடன் 31.7.2020 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
சென்னை காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ஏற்கனவே பல பணிகளுக்கு அனுமதி அளித்து பல்வேறு கட்டுப்பாடுகளுடனும், தளர்வுகளுடனும் இந்த ஊரடங்கு நடைமுறையில் உள்ளது.
தற்போது பெருநகர சென்னை காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளை தவிர (Containment Zone), மற்ற பகுதிகளில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சேவை நிறுவனங்களில், அந்நிர்வாகமே ஏற்பாடு செய்யும் வாகனங்களில் சென்று, அதிகபட்சம் 10 சதவீத பணியாளர்களுடன் இயங்குவதற்கு அனுமதிக்கப்படுகிறது.