இலங்கை அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளள முன்னாள் அதிபர் ராஜபக்சேயின் தம்பி கோத்தபய ராஜபக்சே இலங்கையின் அதிபராக விரைவில் பதவி ஏற்க உள்ளார். அவருக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
இலங்கையின் தற்போதைய அதிபர் மைத்திரிபால சிறிசேனாவின் பதவிக்காலம் வருகிற ஜனவரி மாதம் 9ஆம் தேதி முடிவடைகிறது.
இதையொட்டி அங்கு அடுத்த அதிபரை தேர்ந்தெடுக்கும் தேர்தலுக்கான வாக்குப்பதிவு 12,845 வாக்குச்சாவடிகளில், நேற்று நடைபெற்றது.
இதில் 81.52 விழுக்காடு வாக்குகள் பதிவாகின.
இதையடுத்து பலத்த பாதுகாப்புடன் 355 மையங்களில் வாக்குகள் எண்ணும் பணி, நேற்றிரவில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
பொதுஜன பெரமுனா கட்சியின் சார்பில் போட்டியிட்ட கோத்தபய ராஜபக்சேவுக்கும், ஆளும் ஐக்கிய தேசிய கட்சி சார்பில் போட்டியிட்ட சஜித் பிரேமதாசாவுக்கும் இடையே கடும் போட்டி நிலவியது.
பகல் 1 மணி நிலவரப்படி கோத்தபய ராஜபக்சே 58,55,255 வாக்குகளை பெற்றிருக்கிறார்.
சஜித் பிரமேதசா 47,75,517 வாக்குகள் பெற்றுள்ளார்.
சஜித் பிரேமதாசாவை விட, சுமார் 11 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் கோத்தபய ராஜபக்சே முன்னிலை பெற்றுள்ளார்.
தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளான திரிகோணமலை, கண்டி, வன்னி, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு உள்ளிட்ட மாவட்டங்களில், பதிவான மொத்த வாக்குகளில் 75 விழுக்காட்டிற்கும் அதிகமான வாக்குகளை, சஜித் பிரேமதாசா பெற்றார்.
தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் கோத்தபயவுக்கு மிக குறைவான வாக்குகளே கிடைத்துள்ளன.
இருப்பினும் சிங்களர்கள் அதிகம் வசிக்கும், கொழும்பு, பொலன்னறுவை, கம்பஹா, ஹம்பன்தோட்டா, நுவரெலியா, புத்தளம், மொனராகலை, உள்ளிட்ட மாவட்டங்களில், கோத்தபய ராஜபக்சே அதிகளவிலான வாக்குகளை தனதாக்கியிருக்கிறார்.
50 விழுக்காட்டிற்கும் அதிகமான வாக்குகளை ஒரு வேட்பாளர் பெற்றுவிட்டால், அவர் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுவார்.
அத்தகையை பெரும்பான்மையை யாரும், தனதாக்காவிட்டால், வாக்காளர்களின் இரண்டாவது தேர்வை அடிப்படையாக கொண்டு, வெற்றி நிர்ணயிக்கப்படும்.
இந்த வகையில் இலங்கை அதிபர் தேர்தலில் 52 விழுக்காடு வாக்குகளை பெற்றிருக்கும் கோத்தபய ராஜபக்சே, அந்நாட்டின் அடுத்த அதிபராகிறார்.
42 விழுக்காடு வாக்குகளை மட்டுமே பெற்று, பின்தங்கிய சஜித் பிரேமதாசா, தனது தோல்வியை ஒப்புக் கொண்டிருக்கிறார்.
இதையடுத்து விரைவில் இலங்கையின் அதிபராக கோத்தபய ராஜபக்சே பதவி ஏற்க உள்ளார்.
இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது. புதிய பயணத்தில் அனைவரும் சேர்ந்து பயணிப்போம் என்று அவர் இலங்கை மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.