தமிழகத்தில் கொரோனா பாதிப்பின் காரணமாக கிட்டத்தட்ட 5 மாதங்களாக மக்கள் அதிகமாக கூடும் இடங்கள் அனைத்தும் மூடப்பட்டிருந்தது.
இதன் காரணமாக அங்கு பணிபுரிந்த மக்களின் வாழ்வாதாரம் கேள்விக் குறியானது.
இதனையடுத்து கடந்த 30 ஆம் தேதி தமிழகத்தில் பேருந்துகள், மால்கள், பூங்காக்கள் இயங்கலாம் என அரசு அறிவித்தது.
அதன் படி கடந்த 1 ஆம் தேதி முதல் அரசு அனுமதி அளித்த அனைத்தும் 5 மாதங்களுக்கு பிறகு திறக்கப்பட்டது.
அப்போது படப்பிடிப்புக்கும் அனுமதி வழங்கிய அரசு, தியேட்டர்களை திறக்க கூடாது என தெரிவித்து விட்டது.
இதனால் தியேட்டர் உரிமையாளர்கள் மட்டும் அல்லாமல் பல படங்கள் ரிலீஸ் ஆகாமல் கிடப்பில் இருப்பதால் திரைத்துறையினரும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
எப்போது தான் மீண்டும் தியேட்டர்கள் திறக்கப்படும் என கேள்விகள் எழுந்த வண்ணம் இருக்கின்றன.
இந்த நிலையில் தியேட்டர்கள் திறப்பது குறித்து அமைச்சர் கடம்பூர் ராஜு செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது, தியேட்டர்களை திறப்பது குறித்து விரைவில் நல்ல முடிவு வெளியாகும் என்றும் நாளை தியேட்டர் உரிமையாளர்களுடன் முதல்வரை சந்திக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.