காவல்துறையினருடன் பொங்கல் பண்டிகையை கொண்டாடிய முதல்வர் பழனிசாமி..!!

தை பிறந்திருக்கின்றது, நமக்கெல்லாம் வழி பிறக்கும் என தமிழக முதல்வர் பழனிசாமி கூறினார்.

புனித தோமையார் மலை, ஆயுதப் படை வளாகத்தில் இன்று காவலர்களின் குடும்பத்தினருடன் நடைபெற்ற தைப்பொங்கல் கொண்டாட்டம் 2021 நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார்.

நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:

இந்த நிகழ்ச்சியில் பங்கு பெற்று சிறப்பித்துக் கொண்டிக்கின்ற காவல் துறை உயர் அலுவலர்களே, மற்றும் காவலர்களே, காவலர் குடும்பத்தைச் சேர்ந்தவர்களே மற்றும் இந்த நிகழ்ச்சியில் பங்குபெற்றுள்ள அனைவருக்கும், இந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க வருகை தந்திருக்கின்ற பத்திரிகையாளர் மற்றும் ஊடக நண்பர்களுக்கும் மற்றும் கலை நிகழ்ச்சி நடத்திய கலைஞர்களுக்கும், விளையாட்டுப் போட்டியில் கலந்து கொண்டு தங்களுடைய திறமையை வெளிப்படுத்திய விளையாட்டு வீரர்களுக்கும் முதற்கண் என்னுடைய இதயங்கனிந்த, நன்றிகலந்த வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

சாதி, மத வேறுபாடுகளை கடந்து அனைத்து தமிழர்களாலும் சிறப்பாகக் கொண்டாடப்படும் இந்தத் தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளில் உங்களைச் சந்திப்பதில் பெருமகிழ்ச்சி அடைகின்றேன்.

இந்த இனிய தருணத்தில் எனது ஆங்கிலப் புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துக்களைக் கூறுவதில் நான் மட்டற்ற மகிழ்ச்சியடைகிறேன்.

அமைதி, வளம், வளர்ச்சி என்ற முப்பெரும் கோட்பாடுகளை ஜெயலலிதா நமக்கு வழங்கினார். அந்த வழியில், அவரது அரசும் இன்றைக்கு பல்வேறு துறைகளில் வளர்ச்சி கண்டு, நாட்டிற்கே முன்னுதாரணமாக பல்வேறு விருதுகளைப் பெற்று வெற்றிநடை போட்டு வருகிறது.

வெற்றிநடை போடும் தமிழகத்திற்கு அச்சாணியாக இருப்பது வீரநடை போடும் தமிழ்நாடு காவல் துறை என்றால் அது மிகையல்ல. தமிழ்நாடு அமைதிப் பூங்காவாக திகழ்வதற்கு காவல் துறையின் பங்களிப்பு அளப்பறியது.

எனவேதான், காவல் துறையினருக்கு தமிழக அரசு பல்வேறு நலத் திட்டங்களை அறிவித்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறது.

குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்றால், எம்.ஜி,ஆர் காவலர் வீட்டுவசதி வாரியத்தைத் துவக்கி காவலர்களுக்கு வீட்டுவசதி ஏற்படுத்திக் கொடுத்தார்.

ஜெயலலிதா காவலர் முழு உடல் பரிசோதனைத் திட்டம், உங்கள் சொந்த இல்லத் திட்டம். தமிழ்நாடு காவலர் சிறப்பு அங்காடிகள் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களைக் கொண்டுவந்தார்கள். தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தை உருவாக்கினார்கள்.

பெண் காவலர்களுக்கு பேறுகால விடுப்பை உயர்த்தினார்கள்.

மேலும், காவலர்களின் உடல்நலம் மட்டும் பாதுகாக்கப்பட்டால் போதாது என்று எண்ணி, என் தலைமையில் அமைக்கப்பட்ட இந்த அரசு, இந்தியாவிற்கே முன்னோடியாக காவலர் நிறைவான பயிற்சி என்ற மனநலம் காக்கும் திட்டத்தினை செயல்படுத்தி வருகிறது.

அதேபோல, காவல் துறையின் பணிகள் சிறக்க நான்காவது போலீஸ் கமிஷன் அமைத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், இன்றைய சவால்களை வெற்றிகரமாக எதிர்கொள்ள காவல் துறை நவீனப்படுத்தப்பட்டுள்ளது. காவல் ஆளிநர்களின் மிகைநேரப் பணிகளுக்கான மதிப்பூதியம் 200 ரூபாயிலிருந்து 500 ரூபாயாக உயர்த்தி வழங்க நான் ஆணையிட்டுள்ளேன்.

காவல் துறையிலுள்ள காலிப் பணியிடங்கள் வெகுவாக நிரப்பப்பட்டு, காவல் துறை மேலும் சிறப்பாக செயல்பட வழிவகை செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டின் அமைதிக்கு துணை நிற்கும் காவல் துறைக்கும், அவர்தம் குடும்பத்தினருக்கும் தமிழக அரசு என்றென்றும் துணை நிற்கும் என்பதை இந்த நல்ல வேளையில் தெரிவித்துக் கொள்கிறேன்.

இங்கே நுழைகின்றபோது, ஒரு கிராமத்திலே நுழைந்தால் எப்படி இருக்குமோ அதுபோன்ற எண்ணம் இந்த அரங்கத்திற்குள் நுழைந்ததும் எனது மனதில் தோன்றியது.

இன்று கிராமத்தில் எப்படி பொங்கல் திருவிழாவை குடும்பத்தோடு கொண்டாடினால் மகிழ்ச்சியோடு இருப்போமோ அதைப்போல இங்கே அரங்கிற்குள் இருக்கின்ற காவலர்கள் குடும்பத்தோடு இந்தத் திருவிழாவை கொண்டாடுகின்றபோது, எனக்கு கிராமம் தான் நினைவிற்கு வருகிறது.

தை பிறந்தால் வழி பிறக்கும் என்று சொல்வார்கள். நமக்கெல்லாம் அந்தத் தை பிறந்திருக்கின்றது, நமக்கெல்லாம் வழி பிறக்கும் என்ற இனிப்பான செய்தியை இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த அரங்கத்தினுள் நுழைகின்றபோது, இங்கே காவலர் குடும்பத்தோடு பொங்கல் வைக்கின்ற காட்சி, அதற்குப் பிறகு, போட்டிகள், அதற்குப் பிறகு கிராமச் சூழ்நிலையில் எப்படி இருக்குமோ அதைப்போல ஆடு, பசுமாடு, மாட்டு வண்டி, கிணறு, அருகில் இயற்கை அழகு நிறைந்த ஒரு குடிசை.

தமிழக கிராமங்களில் எப்படி இந்தத் திருவிழாவை கொண்டாடுகிறோமோ அதேபோல, சென்னை மாநகரத்திலும் கிராமத்தையே கொண்டுவந்து இங்கே அமைத்த காவலர்களுக்கு எனது இதயபூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இன்றைக்கு தமிழகம் அமைதிப் பூங்காவாக இருப்பதற்குக் காரணம் நம் காவலர்களுடைய திறம்படப் பணி, அர்ப்பணிப்பு உணர்வு. தமிழகம் இந்தியாவிலேயே அமைதிப் பூங்காவாக விளங்குவதற்கு அடித்தளமாக விளங்குபவர்கள் காவலர்கள்.

அப்படிப்பட்ட காவலர்களோடு, இன்றைக்கு இந்த தைப் பொங்கல் திருநாளை கொண்டாடுவதில் நான் மட்டற்ற மகிழ்ச்சியடைகிறேன் என்பதைத் தெரிவித்து மீண்டும் ஒருமுறை அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே