தஞ்சாவூர் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஏப்.19) முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதால், யாரும் வெளியே வரக்கூடாது என அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் கரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக ஊரடங்கு உத்தரவைக் கடுமையாகக் கடைப்பிடிக்கச் செய்வதற்காக வீட்டுக்கு ஒரு அடையாள அட்டையை வழங்கி வருகிறது.

  • பச்சை வண்ண அடையாள அட்டை வைத்துள்ளவர்கள் திங்கள் மற்றும் வியாழக்கிழமைகளிலும்,
  • நீல வண்ண அடையாள அட்டை வைத்துள்ளவர்கள் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளிலும்,
  • ரோஸ் வண்ண அடையாள அட்டை வைத்துள்ளவர்கள் புதன் மற்றும் சனிக்கிழமைகளிலும் அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்குச் செல்லலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

தேவையில்லாமல் வெளியே வருவதைத் தவிர்ப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

என்றாலும், தஞ்சாவூரில் சனிக்கிழமை பிற்பகல் வரை வாகனப் போக்குவரத்து அதிகமாகவே இருந்தது.

எனவே, பல இடங்களில் அட்டை இல்லாமல் வந்தவர்களை போலீஸார் நிறுத்தி எச்சரிக்கை செய்து அனுப்பினர்.

பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள அண்ணாசிலை, ரயிலடியில் அட்டை இல்லாமல் வாகனங்களில் வந்தவர்களுக்கு காவல்துறை நிகழ்விட அபராதமாக ரூ.200 விதித்து வசூலித்தனர்.

ஆனால், ஞாயிற்றுக்கிழமைகளில் யாரும் வெளியே வரக்கூடாது என மாவட்ட நிர்வாகம் ஏற்கெனவே அறிவித்துள்ளது.

இதன்படி, நாளை ஞாயிற்றுக்கிழமை என்பதால் முழு ஊரடங்கு அமலுக்கு வருகிறது.

எனவே, ஞாயிற்றுக்கிழமை மளிகை, காய்கனி, கறி, இறைச்சி உள்ளிட்ட கடைகளைத் திறக்கக் கூடாது என்றும், பால், மருந்து, குடிநீர் கடைகளுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்படுகிறது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் தஞ்சாவூரில் உள்ள கடைகளில் சனிக்கிழமை கூட்டம் அதிகமாக இருந்தது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே