தமிழகத்தில் அன்னதானம் வழங்கப்படும் அனைத்து  கோயில்களிலும்  இன்று முதல்  இலையில்  உணவு  பரிமாறப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது .

தமிழகம் முழுவதும் 754 கோயில்களில் தரிசனத்துக்கு வருகைதரும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 16ஆம் தேதி திருச்செந்தூர் சுப்ரமணியசுவாமி கோயில், சமயபுரம் மாரியம்மன் கோயில், திருத்தணி சுப்பிரமணியசுவாமி கோயில் ஆகிய 3 கோயில்களில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இந்த திட்டம் பக்தர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் கொரோனா பெருந்தொற்று காரணமாக கோயில்களில் வழங்கப்படும் அன்னதானம், பந்தியில் இலையில் பரிமாறப்படாமல் உணவுப்பொட்டலங்களாக அனைத்து நாட்களிலும் வழங்கப்பட்டு வருவதாகவும், வரும் வாரம் அதில் மாற்றம் செய்யப்படும் என அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு கூறியிருந்தார்.

இந்நிலையில், அன்னதானம் வழங்கப்படும் அனைத்து கோயில்களில் உள்ள அன்னதானக் கூடங்களில் இன்று முதல் தனிநபர் இடைவெளியுடன் பக்தர்களுக்கு இலையில் உணவு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

அதன்படி திங்கள் கிழமை முதல் வியாழக்கிழமை வரை இலையிலும், கோயில்கள் மூடியிருக்கும் வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பொட்டலங்களில் கட்டியும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே