உங்க வீட்ல கண்டிப்பா இருக்க வேண்டிய ஐந்து மூலிகை பொருளும் அது தரும் பலனும்!

கை வைத்தியம் என்பது இன்று நேற்று செய்து வரும் விஷயமல்ல. காலங்காலமாக முன்னோர்கள் செய்துவரும் பாரம்பரிய வைத்தியம்.
வீட்டில் வளரும் குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை யாருக்கு என்ன நோய் ஏற்பட்டாலும் கை வைத்தியம் மூலமே சரி செய்துகொள்வதில் கை தேர்ந்தவர்கள் நம் முன்னோர்கள். இதற்காகவே பெருமளவு மூலிகைகளை வீட்டில் வளர்ப்பார்கள். அதோடு வெளியில் பார்க்கும் இடங்களிலெல்லாம் கிடைக்கும் இலை தழை மூலிகைகளையும் கை வைத்தியத்துக்கு பயன்படுத்துவார்கள். சாதாரண சளி காய்ச்சல் முதல் பிரசவம் வரை வீட்டிலேயே பார்த்துகொண்டார்கள். இதிலேயே பெருமளவு நோயை குணப்படுத்தியும் கொண்டார்கள். அப்படி அவர்கள் பயன்படுத்திய மூலிகைகளில் முக்கியமானவற்றையாவது நாம் வீட்டில் வைத்திருக்க வேண்டும். அப்படி வைத்திருக்க வேண்டிய மூலிகைகள் குறித்து தெரிந்துகொள்ள வேண்டும்.
​துளசி
சளி, காய்ச்சல் காலங்களில் பெருமளவு கைகொடுக்கும் மருந்து இது. குழந்தைகளுக்கு பக்குவமாக கொடுக்க பல வழிகள் உண்டு. ஒரு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு நீரில் இலைகளை சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி தேன் கலந்து கொடுப்பார்கள். துளசி இலையை ஆவியில் வேக வைத்து இடித்து சாறு எடுத்து இருமலுக்கு கொடுத்தால் சட்டென்று இருமல் விடும். வளர்ந்த பிள்ளைகளுக்கு துளசி இலையை அப்படியே மென்று சாப்பிட சொல்வார்கள்.
சளி காய்ச்சலுக்கு மட்டும் அல்லாமல் குடல், வயிறு, வாய் தொடர்பான பிரச்சனைகளை சரிசெய்கிறது. செரிமானப் பிரச்சனைகள் இருந்தால் தினம் இரண்டு இலையை வாயில் அடக்கி உமிழ்நீரோடு கலந்து மென்று சாப்பிடுவார்கள். சரும வியாதிகளுக்கு துளசியை இலையை அரைத்து பற்றுபோடுவார்கள். எதுவுமே இல்லாவிட்டாலும் ஒரு துளசி இலையை வாயில் இட்டு மென்று தின்றாலே போதுமானது.

​தூதுவளை கீரை
கீரைகளில் இதற்கு தனி இடம் உண்டு. இதில் கால்சியம் சத்து நிறைந்திருப்பதால், எலும்புகளையும், பற்களையும் பலப்படுத்த உதவும். தூதுவளை கீரையை பாசிப்பருப்பு சேர்த்து கூட்டு, அல்லது துவையல் நிச்சயம் வாரம் ஒருநாளாவது எடுத்துகொள்ள வேண்டும்.

குறிப்பாக சைனஸ், நெஞ்சுசளி, கோழை இருக்கும் போது இதன் சமூலத்தை ( தூதுவளை இலை, தண்டு, வேர், முள் அனைத்தையும் நிழலில் உலர்த்தி பொடித்து வைக்க வேண்டும். ) தேனில் குழைத்து சாப்பிட்டால் ஆஸ்துமாவின் தீவிரம் அதிகமாகாமல் இருக்கும். இதன் பழத்தையும் மணத்தக்காளி வற்றல் போல் காயவைத்து சாப்பிடலாம். இவை கண்ணுக்கு நன்மை செய்யும். உமிழ்நீர் கட்டுப்படாமல் சுரந்துகொண்டே இருந்தால் இதை சாப்பிடலாம். ஓரளவு கட்டுக்குள் இருக்கும்.

​அருகம் புல்
இதற்கு பெரிய அளவு பராமரிப்பு தேவையில்லை. சாதாரணமாகவே நிலங்களில் இருக்கும். தற்போது இயற்கை மருத்துவம் விரும்புபவர்கள் அருகம் புல் சாறை அதிகம் பருக தொடங்கிவிட்டார்கள். எளிதாக நமக்கு கிடைக்க கூடிய பொருள்களில் அருகம் புல் ஒன்று.

அருகம் புல் நறுக்கி நீரில் ஊறவைத்து மறுநாள் காலை அந்த நீரை வடிகட்டி காய்ச்சி குடித்தால் கண் உஷ்ணம் போன்றவை தீரும். அருகம் புல் சாறு உடல் எடை குறைப்பிலும் பயன்படுகிறது. பெண்களுக்கு வெள்ளைப்படுதல் பிரச்சனை போக்க அருகம்புல் சாறை தினமும் 100 மிலி அளவு குடித்து வந்தால் வெள்ளைப்படுதல் கட்டுப்படும். மாதவிடாய் உதிரபோக்கு கட்டுப்படும். ரத்தத்தில் சேரும் நச்சை வெளியேற்ற அருகம்புல் சாறு பயன்படும்.

​கற்பூரவள்ளி
ஒமவள்ளி என்றழைக்கப்படும் கற்பூரவள்ளி இருகும் இடமே தனி மணத்துடன் இருக்கும். இதனுடைய தண்டு, இலைச்சாறு இரண்டையும் கைவைத்தியத்துக்கு பெருமளவு பயன்படுத்துவார்கள்.

கற்பூரவள்ளி இலை சளி, இருமலை கட்டுப்படுத்தும் என்றாலும் அதிக காரத்தன்மை கொண்டது. இதை குழந்தைகள் குடிக்க மாட்டார்கள். எவ்வளவு கார்ப்பும், வெப்பமும் கொண்டிருக்கீறதோ அவ்வளவும் உடலுக்குள் நன்மை செய்யும். குழந்தைக்கு கொடுக்கும் போது இந்த இலையை நீரில் போட்டு வடிகட்டி தேன் கலந்து கொடுப்பார்கள். இதை வெறுமனே வாயில் இட்டு மெல்ல முடியாது. இந்த இலை தடிமனாக இருப்பதால் இதில் பஜ்ஜி செய்து சாப்பிடலாம். இவையும் எளிதில் கிடைக்ககூடிய ஒன்றுதான்.

குப்பைமேனி
குப்பைமேடுகளில் கிடக்கும் இந்த குப்பைமேனி இலை கண்டிப்பாக அனைவரது வீட்டிலும் இருக்க வேண்டிய மூலிகை. இதை கண்டிப்பாக வீட்டில் வைத்திருப்பார்கள். குழந்தைகள் மண்ணில் விளையாடி சருமம் முழுக்க சொரி சிரங்கு உண்டாகும் போது குப்பைமேனி இலையைத்தான் அரைத்து பற்றுபோடுவார்கள். படர்தாமரை, சொறி, பூச்சிக்கடி, சரும அலர்ஜி அனைத்துக்கும் இவை பயன் தரும். புண்களுக்கு அருமருந்தாக இருக்கும்.
அதிக காயம் உண்டாகும் போது குப்பைமேனி இலையை விளக்கெண்ணெய் சேர்த்து வதக்கி காயத்தின் மீது கட்டினால் வலி குணமடையும். நாள்பட்ட புண்ணில் சீழ் வரும் போது இதனுடன் மஞ்சள்சேர்த்து அரைத்து புண்ணின் மீது தடவி வந்தால் சீழ் வருவது குறையும். சீழ் வடிந்து புழு வந்தாலும் அவை குணமாகும். குடல் புழுக்களை வெளியேற்றவும் மருந்தாக பயன்படும்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே