உத்தரப்பிரதேச மாநிலத்தில் 15 மாவட்டங்களை இன்று நள்ளிரவு முதல் முழுமையாக சீல்

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக உத்தரப்பிரதேச மாநிலத்தில் 15 மாவட்டங்களை இன்று நள்ளிரவு முதல் முழுமையாக சீல் வைக்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.

கொரோனாவுக்கு எதிரான யுத்தத்தில் இந்தியா அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்துள்ளது.

இதுநாள்வரை கொரோனா பரவலை தடுக்க அந்நோய் தாக்கியவர்களை தனிமைப்படுத்தி வந்த சுகாதாரத்துறை அதிகாரிகள் தற்போது அடுத்த அதிரடி கட்டத்தை நோக்கி நகர்ந்து உள்ளன.

இதில் டெல்லி உத்தர பிரதேச அரசுகள் முழுமையான அளவிலான அடைப்பை தொடங்கியுள்ளன.

கொரோனா தொற்று பரவலுக்கு காரணமாக அடுக்குமாடி குடியிருப்புகள், தெருக்கள், நகரின் ஒரு பகுதிகள், முழு நகரம் என்று 105 இடங்களில் சீல் வைக்கப் போவதாக உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தெரிவித்தார்.

ஆக்ரா, நொய்டா, காசியாபாத் போன்றவை இதில் அடங்கும்.

சீல் வைப்பது என்றால் மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என்ற கடுமையான சட்டம் அமல் படுத்தப்படுகிறது. வெளியே வந்தால் கைது செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பை அடுத்து முழு அடைப்பு உத்தரவு அமலுக்கு வருவதற்கு முன்பாக மக்கள் கூட்டம் கூட்டமாக அத்தியாவசிய பொருட்களை வாங்கிக் குவிக்கத் தொடங்கினர்.

ஆனால் தேவையான உணவுப் பொருட்களை வீட்டுக்கே கொண்டுவந்து வினியோகிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருப்பதாக உத்திரப்பிரதேச அரசு தெரிவித்துள்ளது.

மக்கள் பதட்டமடைய வேண்டாம் பொருட்களையும் மருந்துகளையும் வாங்கி குவிக்க வேண்டாமென்றும் வதந்திகளை நம்பவேண்டாம் என்றும் காவல்துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.

இதேபோல் டெல்லியிலும் 20 முக்கிய இடங்கள் அடையாளம் காணப்பட்டு சீல் வைக்கப்படும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இப்பகுதிகளுக்குள் யாரும் நுழையவோ, இங்கிருந்து யாரும் வெளியேறவோ அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று துணை முதல்வர் மணிஷ் சிசோடியா கேட்டுக்கொண்டுள்ளார்.

மத்திய பிரதேசத்தின் உஜ்ஜைன், இந்தூர், போபால் உள்ளிட்ட நகரங்களும் முழு அடைப்புக்கு கீழ் கொண்டுவரப்பட்டு சீல் வைக்கப்படும் என்று முதலமைச்சர் சிவராஜ் சவுகான் அறிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே