இந்திய அரசின் தொழில்நுட்ப கொள்கை மற்றும் தகவல் பாதுகாப்பு விதிமுறைகளை மீறியதாக கடந்த மாதம் டிக்டாக், ஹலோ, கேம் ஸ்கேனர், யுசி புரவுசர் உள்ளிட்ட 59 சீன செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்தது.
இதனை தொடர்ந்து மேலும் பல சீன செயலிகளுக்கு தடை விதிக்கப்படலாம் என்று கூறப்பட்ட நிலையில், ஏற்கனவே தடை செய்யப்பட்ட செயலிகளின் .குளோன்’ (ஒரிஜினல் செயலியைப் போல இயங்கும் போலி) ஆக இயங்கிய 47 செயலிகளுக்கு மத்திய அரசு வெள்ளியன்று தடை விதித்துள்ளது.
மேலும், 275 சீன செயலிகள் பட்டியலிடப்பட்டுள்ளதாகவும், இந்த செயலிகளின் தகவல் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து விசாரணை நடத்தி வரும் நிலையில், இவற்றுக்கும் தடை விதிக்க வாய்ப்பு உள்ளது.
ஜியோமி, அலி எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட செயலிகள் தடை செய்யப்பட வாய்ப்பு அதிகமாக உள்ளதாக கூறப்படுகிறது. இந்த பட்டியலில் பப்ஜி விளையாட்டு செயலியும் உள்ளது.
இந்தியா மற்றும் பல நாடுகளில் மிகவும் பிரபலமான ஸ்மார்ட்போன் மொபைல் கேம்களில் PUBG ஒன்றாகும். இந்தியாவில் மட்டும், இந்த 175 மில்லியனுக்கும் அதிகமான பதிவிறக்கங்களைக் இந்த செயலி கொண்டுள்ளது.
தென் கொரியாவை சேர்ந்த ப்ளூஹோல் நிறுவனம், பப்ஜி கேமை தயாரித்திருந்தாலும், சீனாவை மையமாக கொண்டு இயங்கும் தொழில்நுட்ப நிறுவனமான டென்செண்ட், இந்த செயலியில் கணிசமான பங்குகளை வைத்துள்ளது.