ஓய்வு பெறும் அரசு மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்டோருக்கு பணி நீட்டிப்பு

ஏப்ரல் 30ஆம் தேதியுடன் ஓய்வுபெறவுள்ள மருத்துவர்கள், செவிலியர்களுக்கு மேலும் 2 மாதங்களுக்கு பணிக்காலத்தை நீட்டித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், தமிழக அரசு, கரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை போர்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகிறது.

ஏற்கனவே 1,508 ஆய்வக நுட்புனர்கள், 530 மருத்துவர்கள் மற்றும் 1,000 செவிலியர்கள் தெரிவு செய்யப்பட்டு, பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டு சிறப்பாக பணியாற்றி வருகின்றனர்.

மேலும், 31.3.2020 அன்று பணியிலிருந்து ஓய்வு பெற்ற மருத்துவர், செவிலியர் மற்றும் மருத்துவ தொழில்நுட்ப பணியாளர்கள் ஆகியோருக்கு ஒப்பந்த முறையில் 2 மாத காலத்திற்கு தற்காலிக பணி நியமனம் வழங்கப்பட்டு பணியாற்றி வருகின்றார்கள்.

அதே போன்று, 30.4.2020 அன்று பணியிலிருந்து ஓய்வு பெறவுள்ள மருத்துவர், செவிலியர் மற்றும் மருத்துவ தொழில்நுட்ப பணியாளர்கள் ஆகியோருக்கும் ஒப்பந்த முறையில் 2 மாத காலத்திற்கு தற்காலிக பணி நியமன ஆணைகள் வழங்கப்படும்.

இதனைத் தொடர்ந்து தற்பொழுது 1,323 செவிலியர்கள் மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். 

அவர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டு வருகிறது.

இப்பணியாளர்கள் ஆணை கிடைக்கப் பெற்றவுடன் உடனடியாக பணியில் சேர அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே