நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்திற்கான கால அவகாசம் நீட்டிப்பு..!!

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கும், ஆறுமுகசாமி கமிஷன், பதவி காலத்தை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் முதல்வர் ஜெ., மரணம் குறித்து விசாரிக்க, ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில், 2017 செப்., 15ல் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது.

விசாரணையை முடிக்க, மூன்று மாதம் அவகாசம் தரப்பட்டது. விசாரணை முடியாததால், அவ்வப்போது அவகாசம் நீட்டிக்கப்பட்டது.

எட்டாவது முறையாக நீட்டிக்கப்பட்ட பதவி காலம், இம்மாதம், 24ம் தேதி முடிகிறது.

தற்போது, ஆறுமுகசாமி கமிஷனின் விசாரணைக்கு தடை கோரி, அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் தொடர்ந்த வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. 

இதனால், விசாரணை முடியாமல் உள்ளது. இந்நிலையில், விசாரணை கமிஷன் பதவி காலத்தை, மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டிக்க கோரி, விசாரணை கமிஷன் சார்பில், தமிழக அரசுக்கு கடிதம் எழுதப்பட்டது.

இதனை ஏற்ற தமிழக அரசு, ஆறுமுகசாமி கமிஷனின் பதவி காலத்தை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.

இக்கமிஷனின் பதவி காலத்தை நீட்டிப்பது இது 9வது முறையாகும்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே