மின்சார வாரியம் தனியார் மயமாகாது – அமைச்சர் தங்கமணி

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் உள்ள உதவியாளர் பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் அவுட்சோர்சிங் மூலம் நிரப்பப்படும் என்கிற அரசாணை ரத்து செய்யப்படுவதாக மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

சென்னை அண்ணாசாலையில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் அவர், நீதிமன்றத்தில் தொழிற்சங்கங்கள் தொடர்ந்த வழக்கை திரும்பப் பெற்றால் 5 நாட்களுக்குள் பத்தாயிரம் கேங்மேன் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று அவர் கூறினார்.

மின்சார வாரியத்தை தனியார்மயமாக்க எந்த சூழ்நிலையிலும் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது என தெரிவித்தார்.

ஆனாலும் கூட தொழிற்சங்கங்கள் போராட்டத்தில் ஈடுபடுவதாக சுட்டிக்காட்டினார்.

அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் போராட்டங்கள் நடந்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மின் ஊழியர் சங்கங்கள் பேச்சுவார்த்தைக்கு மறுப்பது ஏன் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

30,000 பணியாளர்களை தனியார் மூலம் நியமிக்கும் உத்தரவு வாபஸ் பெறப்படுவதாகவும் தெரிவித்தார்.

தொழிற்சங்க நிர்வாகிகள் வழக்கை வாபஸ் பெற்றால் உடனே 10,000 பேருக்கு பணி வழங்கப்படும் என்றும் கூறியுள்ளார்.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் உடனடியாக பேச்சுவார்த்தைக்கு வர வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், ‘அதானிக்கு நாங்கள் பயிற்சி கொடுத்து கொண்டிருப்பதாக வாட்ஸப்பில் தகவல் பரப்பிக் கொண்டிருக்கிறார்கள். ஒரே ஒரு நபர் மட்டும் சோலார் பயிற்சி எடுத்து வருகிறார். கட்டணம் செலுத்தி யார் வேண்டுமானாலும் பயிற்சி பெற்றுக் கொள்ளலாம்’ என விளக்கமளித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே