நாடு முழுவதும் வாகன ஓட்டுநர் உரிமங்கள், வருகிற ஜூன் 30 ஆம் தேதி வரை செல்லுபடியாகும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சகம் மாநில அரசுகளுக்கு வெள்ளிக்கிழமை அனுப்பியுள்ள அறிவுறுத்தல் விவரம்:

கரோனா பேரிடர் காரணமாக வாகன பதிவு, வாகன பெர்மிட் ஓட்டுநர் உரிமம் ஆகியவை செல்லும்படியாகும் காலம் ஜூன் மாதம் 30 ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது.

இதே காரணத்துக்காக, கடந்த ஆண்டில் இதுபோல பல முறை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, கடந்த பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் காலவதியான வாகன பெர்மிட் ஓட்டுநர் உரிமம் தொடர்பான அனைத்து ஆவணங்களும் ஜூன் 30 ஆம் தேதி வரை செல்லுப்படியாகும். பொதுமக்களுக்கும் இந்த சலுகை பெரும் உதவியாக இருக்கும்.

வாகனப் போக்குவரத்தின்போது மக்கள் சிரமங்களை எதிர்கொள்வதைத் தடுக்கும் வகையில் இந்த அறிவுறுத்தலை மாநில அரசுகள் உரிய முறையில் பின்பற்ற வேண்டும்.

வாகன ஆவணங்கள் செல்லுபடியாகும் காலம் ஜூன் 30 என்பதை அமலாக்கத் துறை அதிகாரிகளும் கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன், செல்லுப்படியாகும் காலம் மார்ச் 31 ஆம் தேதி வரை என நீட்டித்து அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே