அமெரிக்கா : போராட்டகாரர்களுக்கு டிரம்ப் மிரட்டல்!

அமெரிக்காவில் போராட்டத்தை உடனடியாக நிறுத்தாவிட்டால் ராணுவத்தை பயன்படுத்தப் போவதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் மிரட்டல் விடுத்திருக்கிறார்.

அமெரிக்காவின் மினியாபொலிஸ் நகரில் பிளாய்ட் என்ற கறுப்பினத்தவர் போலீஸ் அதிகாரி ஒருவரால் கொல்லப்பட்டதை தொடர்ந்து 75க்கும் மேற்பட்ட நகரங்களில் போராட்டங்கள் தீவிரம் அடைந்துள்ளன.

ஒருசில இடங்களில் வன்முறை வெடித்ததால் கட்டிடங்கள், வணிக வளாகங்கள், போலீஸ் வாகனங்கள் அடித்து நொறுக்கபட்டு தீக்கிரையாக்கப்பட்டன.

நியுயார்க், சிகாகோ, லாஸ் ஏஞ்சல்ஸ் உள்ளிட்ட நகரங்களில் போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் வெடித்துள்ளன.

அமெரிக்கா முழுவதும் போராட்டம் தீவிரம் அடையத் தொடங்கியுள்ளதால் நிலைமையை சமாளிக்க பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். 

40க்கும் மேற்பட்ட நகரங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

போராட்டக்காரர்களின் இடிமுழக்கம் அமெரிக்க அதிபர் டிரம்பை பதுங்கு குழிக்குள் தள்ளிய நிலையில், ஜார்ஜ் ஃபிளாய்ட் விவகாரம் குறித்து அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய டிரம்ப், ஜார்ஜ் ஃபிளாய்டின் மரணத்திற்கு நீதி வழங்கப்படும் என்றும் அமெரிக்க மக்களை பாதுகாத்து நாட்டின் சட்டத்திட்டங்களை நிலைநாட்டுவதே தனது கடமை எனவும் குறிப்பிட்டார்.

அமெரிக்காவில் தற்போது நடைபெறுவது அமைதியான போராட்டம் அல்ல எனக்கூறிய டிரம்ப், இவை உள்நாட்டுப் பயங்கரவாத செயல் என கடுமையாக சாடியுள்ளார்.

அப்பாவி மக்களின் வாழ்க்கையை அழிப்பதும், ரத்தம் சிந்தப்படுவதும் மனிதக்குலத்திற்கு எதிரான ஓர் குற்றம் எனவும் டிரம்ப் பேசியுள்ளார்.

மாநில நிர்வாகம், போராட்டத்தை தடுக்க போதிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் இல்லையெனில் ராணுவத்தை கொண்டு விரைவில் போராட்டத்தை கட்டுக்குள் கொண்டு வருவேன் எனவும் அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளார்.

ஏற்கனவே போராட்டக்காரர்களை குண்டர்கள் என அமெரிக்க அதிபர் பேசியது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் தற்போது ராணுவத்தை பயன்படுத்த உள்ளதாக மிரட்டல் விடுத்திருப்பது போராட்டக்காரர்களை கொந்தளிக்க செய்திருக்கிறது..

இதற்கிடையே ஜார்ஜ் பிளாய்டின் பிரேத பரிசோதனை அறிக்கைகளும் வெளியாகியுள்ளன.

அதில் அவரது உடலின் பின்பகுதி மற்றும் கழுத்து நசுக்கப்பட்டதால், அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு மரணம் நிகழ்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

1968ல் மார்டின் லூதர் கிங் கொலைக்கு பிறகு அமெரிக்காவில் தற்போது தான் இந்த அளவிற்கு இனக் கொந்தளிப்பும் அமைதியின்மையும் ஏற்பட்டுள்ளது.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே