வேளாண் சட்டங்களை திரும்பப்பெறும் வரை போராட்டம் தொடரும் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
வேளாண் சட்டங்களை எதிர்த்து டில்லியில் போராட்டம் நடத்தும் விவசாயிகளுக்கு ஆதரவாக தடையை மீறி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர்.
இதில், திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் ‘விவசாயிகளை வஞ்சிக்கும் சட்டங்களை திரும்பப்பெறு’ என்ற வாசகத்துடன் கூடிய பச்சை நிற மாஸ்க் அணிந்து உண்ணாவிரத போராட்டத்தில் பங்கேற்றனர்.
அப்போது அனைவரும் டில்லி போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளுக்காக 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர்.
பின்னர், ஸ்டாலின் பேசியதாவது: மத்திய அரசு, விவசாயிகள் நலன் பற்றி சிந்திக்காமல் கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு ஆதரவாக செயல்படுகிறது.
வேளாண் சட்டங்களை திரும்பப்பெறும் வரை போராட்டம் தொடரும்.
போராடும் விவசாயிகளை அன்னிய கைக்கூலிகள், தீவிரவாதிகள் என மத்திய அரசு முத்திரை குத்துகிறது. வேளாண் சட்டங்களில் திருத்தங்கள் தேவையில்லை, முழுவதுமாக திரும்பப் பெற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.