கொரோனாவை விட மோசமான வைரஸ் “திமுக” – துணை முதல்வர் ஓ.பி.எஸ். பேச்சு..!!

அ.தி.மு.க. செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் இன்று காலை சென்னையை அடுத்த வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி திருமண மண்டபத்தில் அவைத் தலைவர் மதுசூதனன் தலைமையில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்த கூட்டத்தில் பேசிய அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், எனக்கு மட்டும் விசுவாசமாக இருங்கள் என்று நான் சொன்னதில்லை. கட்சிக்கு மட்டுமே அனைவருமே விசுவாசமாக இருங்கள் என்று சொல்கிறேன்.

சாமானியரும் முதல்வர், துணை முதல்வராக முடியும் என நிரூபித்தது அதிமுகதான். எந்த கட்சியிலும் இந்த சுதந்திரம் கிடையாது. வெற்றி ஒன்றை மட்டுமே குறிக்கோளாக கொண்டு அனைவரும் செயல்பட வேண்டும்.

கபட வேடதாரிகள் நல்ல பிள்ளைகள் போல வேடம் போடுகின்றனர். திமுகவின் துரோகங்களை மக்களிடம் எடுத்துச்சொல்லுங்கள். மக்கள் தான் எஜமானர்கள் நாம் எல்லோரும் பணியாற்றும் சேவகர்கள்.

இங்கே யாரும் யாருக்கும் அடிமையில்லை. யாரும், யாரையும் கட்டுப்படுத்த முடியாது.

எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள் என்பதை மனதில் வைத்துக்கொள்ள வேண்டும். மக்களின் மகத்தான ஆதரவை சிந்தாமல் சிதறாமல் வாக்குகளாக மாற்ற வேண்டும்.

அதிமுக ஒரு கோட்டை அதை யாரும் அசைக்க முடியாது. எங்கோ ஒரு மூளையில் இருந்த நம்மை இங்கு அமர வைத்தது மாண்புமிகு மறைந்த முன்னாள் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா.

அதிமுகவிற்கும், ஜெயலலிதா அம்மையாருக்கும் நன்றிக் கடன் ஆற்ற வேண்டும். நாம் மாளிகையில் இருக்கவில்லை மக்களோடு மக்களாக இருக்கிறோம்.

தமிழகத்தில் 30 ஆண்டு காலம் ஆட்சி செய்த கட்சி அதிமுக மட்டுமே. நம்மை யாராலும் ஆட்டவோ அசைக்கவோ முடியாது.

சாதாரண தொண்டர்களால் வலுவாக உருவாகியுள்ள இயக்கம் அதிமுக. அதிமுகவில் வேஷ்டி கட்டும் ஆண்கள் உண்டு கோஷ்டி சேர்க்கும் ஆட்கள் இல்லை.

அதிமுக தொண்டர்கள் நல்லவர்கள் வல்லவர்கள் என்ற பெயர் உள்ளது. 2021ஆம் ஆண்டு தமிழகத்தில் புதிய புரட்சி உருவாகும்.

சட்டமன்ற தேர்தலுக்காக ஓடி, ஓடி உழைக்க வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் உள்ளது.

கொரோனாவை விட மோசமான வைரஸ் ஆக திமுக திகழ்கிறது என்று துணை முதல்வர் பொதுக்கூட்டத்தில் பேசியுள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே